This article is from Aug 08, 2020

பாபர் மருத்துவமனை என பரவும் தவறான புகைப்படம்| உண்மை என்ன ?

பரவிய செய்தி

நீதிமன்றத்தின் ஆனையின்படி அநியாயமாக இடித்த பாபர் மசூதிக்கு பரிகாரமாக முஸ்லிம்களின் வஃக்பு வாரியதிற்கு கிடைக்கும் ஐந்து ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்டமான பாபர் மருத்துவமனை கட்ட வாரியம் முடிவு. இலவசமாக செயல்படும் இந்த மருத்துவமனை நிர்வாகிக்கும் பொருப்பு மற்றும் தலைமை மருத்துவராக டாக்டர் கபில்கான் அவர்களை நியமனம் செய்யபடும்.  AIIMS மருத்துவமனையைவிட பிரம்மாண்டம் செயல்படுத்த வஃக்பு வாரியம் முடிவு.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு பூமி பூஜை நடைபெற்ற பிறகு, அயோத்தியில் பாபர் மசூதிக்கு பதிலாக உச்சநீதிமன்றத்தால் ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை போன்று சிறப்பு வாய்ந்த மருத்துவமனை ஒன்றைக் கட்ட சன்னி வஃக்பு வாரியம் முடிவெடுத்து உள்ளதாகவும், அதற்கு தலைமை மருத்துவராக கபீல்கான் இருப்பார் என அறிவித்து உள்ளதாக ஓர் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. சன்னி வஃக்பு வாரியம் பாபர் பெயரில் மருத்துவமனை கட்டப் போவதாக கூறும் தகவலே இந்திய அளவில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

2019 நவம்பர் மாதம் அயோத்தி பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்ததோடு, மசூதி கட்டிக் கொள்ள சன்னி வஃக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலத்தை வழங்க உத்தரவு பிறப்பித்து இருந்தது.

2020 பிப்ரவரி 24-ம் தேதி, ” உத்தரப் பிரதேச சன்னி வஃக்பு வாரியத்தின் ஆலோசனை கூட்டத்தில் அரசு வழங்கும் 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக் கொள்ள முடிவெடுத்து உள்ளனர். வாரியம் அமைக்கும் அறக்கட்டளை மூலம் மசூதி கட்டுமானம் விரைவில் தொடங்கும். மசூதி குறித்து அறக்கட்டளையை முடிவெடுக்கும். மசூதியைத் தவிர, இந்தோ-இஸ்லாமிய ஆராய்ச்சி மையம், பொது நூலகம் , தொண்டு மருத்துவமனை மற்றும் பிற பயனுள்ள வசதிகள் இருக்கும் ” என வாரியத்தின் தலைவர் ஜுபர் பாரூகுய் செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாக இந்தியா டுடே செய்தியில் வெளியாகி இருந்தது. அதில் இடம்பெற்ற புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.

இது தவிர பல்வேறு செய்திகளில் சன்னி வஃக்பு வாரியத்தால் உருவாக்கப்படும் அறக்கட்டளை மூலம் 5 ஏக்கம் நிலத்தில் மசூதி உடன் மருத்துவமனை, நூலகம், இஸ்லாமிக் ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவையை அமைக்க உள்ளதாக வெளியாகி இருக்கிறது.

இது குறித்து உத்தரப் பிரதேசத்தின் சன்னி வஃக்பு வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோரை தொடர்பு கொள்ள முயன்று பயனளிக்கவில்லை. சமீபத்தில் தான், 15 உறுப்பினர்கள் கொண்ட இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. ஆகையால், அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் ஆர்தர் ஹுசைன் என்பவரை யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசிய போது,

”  5 ஏக்கர் நிலத்தில் கண்டிப்பாக மசூதி கட்டப்படும். மசூதி தவிர மருத்துவமனை, சமூதாய உணவுக்கூடம், இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவை கட்டுவது தொடர்பாக திட்டம் பரிந்துரையில் இருக்கிறது. ஆனால், பாபர் மருத்துவமனை என்கிற பெயரில் பெரிய மருத்துவமனை கட்டுவதாக கூறியது வதந்தியே ” எனத் தெரிவித்து உள்ளார்.

பாபர் மருத்துவமனையின் ப்ளூ பிரிண்ட் அல்லது மாதிரி புகைப்படம் என வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் 2018-ம் ஆண்டு news.virginia.edu எனும் இணையதளத்தில் இடம்பெற்று உள்ளது. அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள யூனிவர்சிட்டி ஆப் வெர்ஜினியா மருத்துவமனையின் புகைப்படத்தை பாபர் மருத்துவமனை என போட்டோஷாப் செய்து இருக்கிறார்கள்.

உத்தரப் பிரதேசத்தின் சன்னி வஃக்பு வாரியத்திற்கு வழங்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை போன்று பெரிய மருத்துவமனை கட்டுவதாகவும், அதற்கு மருத்துவர் கபீல்கான் தலைமை மருத்துவராக நியமிக்கப்படுவார் எனப் பரவிய தகவல் முற்றிலும் தவறானது. அதேபோல், பாபர் பெயரில் கட்டப்படும் மருத்துவமனை எனப் பகிரப்படும் புகைப்படமும் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டவையே. 5 ஏக்கர் நிலத்தில் மசூதி உடன் மருத்துவமனை, இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார ஆராய்ச்சி மையம் போன்றவை அமைப்பது தொடர்பான திட்டம் பரிந்துரையில் இருப்பதாகவே கூறப்படுகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader