இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் இந்துக் கோவிலா ?
பரவிய செய்தி
இந்தோனேசியாவின் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட 5000 ஆண்டுகள் பழமையான இந்துக் கோவில். இதனை கோவில் பூங்கா என்றழைக்கின்றனர்.
மதிப்பீடு
சுருக்கம்
2005 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் பாலி பகுதியின் கடலுக்கு அடியில் “ Taman Pura “ எனும் கோவில் பூங்காவை உருவாக்கியுள்ளனர். அங்கு தூண்கள், இந்துக் கடவுள் சிலை மற்றும் புத்தரின் சிலைகள் வைத்து அழகுப்படுத்தி உள்ளனர்.
விளக்கம்
இந்தோனேசியாவின் கடலுக்கு அடியில் பழமையான இந்துக் கோவில் கண்டுபிடிக்கப்பட்டது என ஃபேஸ்புக், யூடியூப் போன்றவற்றில் பரபரப்பாக வீடியோக்கள், படங்கள் பரவி இருப்பதை பார்த்து இருப்பீர்கள்.
வீடியோக்களில் பார்ப்பது போன்று கடலுக்கு அடியில் அப்படி ஒரு பகுதி இருக்கின்றதா என்றால் ? ஆம் ! இருக்கிறது. ஆனால், பழங்கால இந்துக் கோவில் என்பது தவறாகும்.
கோவில் பூங்கா :
இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவின் மேற்கு பகுதியில் இருக்கும் வடக்கு கடற்பகுதியில் உள்ள பெமுடேரன் விரிகுடாவில் கடலுக்கு அடியில் “ Taman Pura “ அமைந்து இருக்கிறது. Taman என்றால் பூங்கா, pura என்றால் பாலி இந்துக் கோவில் என்று அர்த்தம்.
கடலுக்கு அடியில் கலைநயமிக்க கோவில் பூங்கா அமைய முழு காரணமாக இருந்தவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Chris brown. பாலி கடல் பகுதியில் “ பாறை கோவில் பூங்கா “ அமைப்பதற்கு Chris brown-ன் நண்பர் பாலி புனர்வாழ்வு நிதியை அணுகிய போது, இந்த முயற்சி நாட்டின் எதிர்கால சுற்றுலா பயணிகளின் வருகைக்கு எதிர் மறையாக அமைந்து விடும் என கருதினர்.
எனினும், 2005-ல் அனுமதி அளிக்கப்பட்ட பின் கடலுக்கு அடியில் “ கோவில் பூங்கா “ கட்டமைக்கப்பட்டது. இதில், பயிற்சி பெற்ற கடலுக்கு அடியில் நீந்துபவர்கள் கொண்டு செதுக்கப்பட்ட கடவுள்களின் சிலைகள் மற்றும் கடலாமை போன்ற சிலைகள் வைக்கப்பட்டன. மேலும், சில கட்டமைப்பு பணிகளையும் செய்து உள்ளனர்.
கோவில் பூங்காவின் முதல் தளம் கடலில் 30 மீட்டர் ஆழத்தில் அமைந்து இருக்கும். இங்கு இந்துக் கடவுளான விநாயகர் சிலையும் அமைந்து இருப்பதாக கூறியுள்ளனர். பூங்காவின் இரண்டாம் பகுதி 2006-ல் 15 மீட்டர் ஆழத்தில் அமைந்து உள்ளனர். இங்கு மிக முக்கியமானது புத்தரின் சிலையாகும்.
“ Reef Gardener “ என அழைக்கப்படும் இத்திட்டத்திற்கு நன்கொடைகள் பெறப்படுகிறது. அதனைக் கொண்டு அப்பகுதியில் வசிக்கும் வேலையில்லா மீனவ சமுதாய மக்களுக்கு பூங்காவை பராமரிக்கும் பணி வழங்கி உதவியுள்ளனர்.
2010 ஆம் ஆண்டில் பாலி தீவின் “ Taman Pura “ உலகம் முழுவதும் புகைப்படங்களை மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த Paul turley என்ற புகைப்படக்கலைஞர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பிறகு பிரபலமானது. இதன் பின்னே இந்தோனேசியா கடலுக்கு அடியில் பழமையான இந்துக் கோவில் கண்டுபிடிக்கப்பட்டது எனவும், அட்லாண்டிக் பகுதிகள் எனக் கூறி கட்டுக்கதைகளும் பரவத் தொடங்கின.
இன்று பிரபலமாகி வரும் இந்தோனேசியாவின் “ Taman Pura “ எனும் கோவில் பூங்காவில் “ திருமணங்கள் “ கூட நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
update :
” ஜெய்ஸ்ரீராம் ! இந்தோனேசியாவில், பாலி தீவில் , கடலுக்கடியில் 90 அடி ஆழத்தில் கட்டப்பட்ட 5000 ஆண்டுகள் பழமையான ” தேவதா விஷ்ணு ” கோவில் ” என இந்து பேரரசு முகநூல் குழுவில் பகிரப்பட்ட புகைப்படங்கள் ஆயிரக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் “ Taman Pura “ எனும் கோவில் பூங்கா சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டவை. அது தொடர்பான ஆதாரங்களை முன்பே நாம் வெளியிட்டு இருந்தோம். ஆனால், தற்பொழுது மேலும் சில புகைப்படங்கள் அதே கதையுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அப்படி வைரலாகும் புகைப்படத் தொகுப்பில் உள்ள புகைப்படங்கள் ” Shutter Stock ” என்ற இணையதளத்தில் வெளியாகி இருக்கின்றன. பாலி தீவு பகுதியில் கடலுக்கு அடியில் கோவில் பூங்கா அமைக்கப்பட்டது சமீபத்திலேயே, 5000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கோவில் அல்ல.