பெங்களூரில் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் அப்துல் சலீம் கைது எனப் பரவும் தவறான செய்தி !

பரவிய செய்தி

புகழ் பெற்ற பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஜிஹாதி தீவிரவாதி அப்துல் சலிம் கைது..

X Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

மார்ச் 1 அன்று பெங்களூருவின் ஒயிட் ஃபீல்டில் அமைந்துள்ள ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த விபத்தில் உணவகப் பணியாளர்கள் உட்பட மொத்தம் 10 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் தற்போது சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தோடு தொடர்புடைய தீவிரவாதி அப்துல் சலீம் கைது செய்யப்பட்டதாகக் கூறி, முஸ்லீம் இளைஞர் ஒருவரின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்தப் புகைப்படத்தில் இருப்பவருக்கும், பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை அறிய முடிந்தது.

மார்ச் 3 அன்று iNEWS என்ற யூடியூப் பக்கத்தில், பரவி வரும் இதே புகைப்படத்தைக் குறிப்பிட்டு, “கடப்பாவில் தீவிரவாதி கைது PFI தலைவர் அப்துல் சலீம் கைது” என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

எனவே இந்த செய்தி குறித்து மேலும் ஆய்வு செய்து பார்த்ததில், மார்ச் 3 அன்று The Hindu செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடப்பா மாவட்டத்தில் உள்ள மைடுகூர் நகரத்தில் இருந்து, தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பைச் சேர்ந்தவரும், தெலங்கானாவின் நிஜாமாபாத் PFI வழக்கில் தேடப்படும் நபருமான ஒருவர் கைது செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) அறிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் அப்துல் சலீம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த வழக்கோடு தொடர்புடைய பதினைந்தாவது குற்றவாளி இவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பரவி வரும் புகைப்படத்தில் இருப்பவர், நிஜாமாபாத் PFI வழக்கின் குற்றவாளி என்பது தெளிவாகிறது. 

மேலும் சமீபத்தில் நடந்த பெங்களூரு குண்டு வெடிப்போடு தொடர்புடையவர்கள், யாரேனும் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் தேடிப் பார்த்தோம். பெங்களூரு காவல் ஆணையர் இது குறித்து மார்ச் 02 அன்று தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த வழக்கின் விசாரணை மத்திய குற்றப்பிரிவு (CCB) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் குணமடைந்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை” என்று அதில் குறிப்பிட்டுள்ளதையும் காண முடிகிறது. 

மேலும் படிக்க: வெறுப்புணர்வின் உச்சம், “அயோத்தி கோவிலில் குண்டு வெடிப்பு” என முஸ்லீம்கள் பெயரில் மிரட்டல் விடுத்துள்ள இளைஞர்கள் !

மேலும், பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் அப்துல் சலீம் கைது என்று சமூக வலைதளங்களில் பரவி செய்திகளுக்கு பெங்களூர் மற்றும் கடப்பா போலீஸ் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். “சலீம் தெலுங்கானாவில் வேறொரு வழக்கில் தேடப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் தலைவர்” என Deccan Herald வெளியிட்டுள்ள செய்தியில் வெளியாகி இருக்கிறது.

முடிவு:

நம் தேடலில், பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் அப்துல் சலீம் கைது எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதையும், பரவி வரும் புகைப்படத்தில் இருப்பவர் 2022ல் பதிவு செய்யப்பட்ட நிஜாமாபாத் PFI வழக்கோடு தொடர்புடைய குற்றவாளி என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader