ராணுவ வீரர்களின் நினைவு சின்னத்தை சேதப்படுத்துவது பங்களாதேஷ் முஸ்லீமா ?
பரவிய செய்தி
நமது பாரத நாட்டிற்காக போரில் தன்னுயிரையே தியாகம் செய்த நமது ராணுவ வீரர்களுக்கு வைக்கப்பட்ட அமர்ஜோதி நினைவு சின்னத்தை எவ்வளவு மதவெறியோடு உதைக்கிறான் இந்த பங்களாதேஷ் முஸ்லீம்.
மதிப்பீடு
விளக்கம்
இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு இந்திய பகுதியில் போராட்டங்களும், கலவரங்களும் உண்டாகி இருக்கிறது. இந்நிலையில், கலவரங்கள் தொடர்பாக பல புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அதில், கலவரத்தில் ஈடுபடும் பங்களாதேஷ் முஸ்லீம்கள் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் நினைவு சின்னத்தை மதவெறியோடு உதைக்கும் காட்சி என ஓர் மீம் பதிவை காண நேரிட்டது. இதே புகைப்படங்கள் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பரவி உள்ளது. அது குறித்து ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.
மீம் பதிவில் இடம்பெற்று இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில், 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி NDTV செய்தியில் மும்பையில் அசாத் மைதானத்தில் வைக்கப்பட்டு இருந்த அமர் ஜவான் நினைவு சின்னத்தை சேதப்படுத்தும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் என வெளியாகி இருக்கிறது. அந்த சமயத்தில், நினைவு சின்னத்தை லத்தியால் சேதப்படுத்தும் மற்றொரு நபரின் புகைப்படமும் வெளியாகி இருந்தது.
1857-ல் ஏற்பட்ட சிப்பாய் கலகத்தின் தியாகிகள் Sayyed Hussein மற்றும் Mangal Cadiya ஆகியோருக்கான வைக்கப்பட்ட நினைவு சின்னத்தை போராட்டக்காரர்கள் சேதப்படுத்திய புகைப்படத்தை மிட் டே புகைப்படக் கலைஞர் அதுல் கம்ப்ளே என்பவர் எடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, shahbaz Abdul Qadir என்ற இளைஞரை கைது செய்ததாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு பிறகு ராணுவ வீரர்களின் அமர்ஜோதி நினைவு சின்னத்தை சேதப்படுத்தும் நபர் பங்களாதேஸ் முஸ்லீம் எனக் கூறுவது தவறான தகவல். இந்த சம்பவம் 2012-ல் மும்பையில் கலவரத்தின் போது நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபரை காவல்துறை கைது செய்துள்ளது.
இதேபோல், குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர்பாக சமூக வலைதளங்களில் உலாவி வரும் தவறான புகைப்படங்கள், வீடியோக்கள் குறித்து தொடர்ந்து பதிவிட தயாராக உள்ளோம்.