This article is from Oct 12, 2020

வைரலாகும் பங்களாதேஷ் ரிக்சா தொழிலாளியின் கண்ணீர் புகைப்படங்கள் !

பரவிய செய்தி

மனிதன் எந்த அளவிற்கு மனிதாபிமானம் அற்றவன் என்பதற்கு உதாரணம்..
இந்த புகைப்படங்கள் தான்.


தன் வாழ்க்கையை சைக்கிள் ரிக்‌ஷா இழுத்து சம்பாரிக்கும் ஒரு ஏழை ரிக்‌ஷா தொழிலாளியின் ரிக்‌ஷாவை புல்டோஷர் கொண்டு சுக்கு நூறாக்கிய காட்சி. தன் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டதை கண்டு கதறி அழும் அந்த மனிதனின் வேதனை அழுகையை பாருங்கள். உங்களுக்கு ஒரு வலி ஏற்படும். Note : சைக்கிள் ரிக்சாகளுக்கு பங்களாதேஷ் தடைவிதித்துள்ளது.


Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

பங்களாதேஷ் நாட்டில் ரிக்சாக்களுக்கு தடை விதித்தக் காரணத்தினால் ரிக்சா இழுத்து பிழைப்பை நடத்தும் ஏழை தொழிலாளியின் ரிக்சாவை புல்டோஷர் கொண்டு சுக்கு நூறாக்கிய காட்சியைக் கண்டு வேதனையால் அழும் தொழிலாளி என மேற்காணும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இந்திய அளவில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்ததாக சிலர் தவறாகப் பரப்பி வந்தனர்.


பங்களாதேஷ் நாட்டின் ரிக்சா ஓட்டுனரின் வாகனம் பறிக்கப்பட்டது சம்பவம் குறித்தும், அதன்பின் என்ன நிகழ்ந்தது என்பதை விரிவாக இங்கு காண்போம். இதுகுறித்து தேடிய போது, அக்டோபர் 9-ம் தேதி ” Social media comes to the rescue of Bangladeshi rickshaw driver after officials seize his vehicle ” எனும் தலைப்பில் ரிக்சா தொழிலாளியின் புகைப்படத்துடன் வைரலான வீடியோ குறித்த செய்தி வெளியிட்டு உள்ளனர்.


” அந்த வைரல் வீடியோவில் இருக்கும் நபர் டாக்காவில் பேட்டரி ரிக்சா ஓட்டுநரான ஃபஸ்லூர் ரஹ்மான். பேட்டரியால் இயங்கும் அவரின் ரிக்சாவை டாக்கா சவுத் சிட்டி கார்ப்பரேஷன்(டி.எஸ்.சி.சி) பறிமுதல் செய்யும் போது அழுதுக் கொண்டிருக்கிறார். மேயர் ஷேக் பாஸில் நநூர் தபோஷ் அறிவிப்பின்படி, அப்பகுதியில் இருக்கும் இ-ரிக்சாக்களை அகற்றும் பணிகளை டி.எஸ்.சி.சி மேற்கொண்டு வருகிறது.


சமீபத்தில் 80,000 ரூபாய்க்கு(பங்களாதேஷ் பணம்) கடனுக்கு வாங்கிய தன்னுடைய ரிக்சா பறிக்கப்படுவதை கண்டு ஃபஸ்லூர் ரஹ்மான் கண்ணீர் விட்டு அழும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் வைரலாகியது. இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டது போல் அஹ்சன் என்பவர் ஃபஸ்லூரை சந்தித்துள்ளார் மற்றும் புதிய பேட்டரி ரிக்சாவை வழங்க ஆர்டர் செய்துள்ளார்.


அதேபோல், ஆன்லைன் மளிகை சேவை செய்யும் ஸ்வாப்னோ எனும் நிறுவனம் ஃபஸ்லூருக்கு உதவ முன் வந்துள்ளது. அவருக்காக இரண்டு பேட்டரி ரிக்சாக்களை வாங்கி தருவதாகவும், அதன்மூலம் வீட்டு விநியோக சேவையைத் தொடங்குவார் என்றும் அறிவித்து உள்ளது ” என வெளியாகி இருக்கிறது.


இதுகுறித்து ஃபஸ்லூர், எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தையே இல்லை. என் ரிக்சாவை என்னிடம் இருந்து பறித்தபோது நான் என்னையே இழந்தேன். ஆனால், இன்று நான் மீண்டும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். அந்த சூழ்நிலையில் இருந்து என்னை மீட்டு என் கனவை நனவாக்கிய ஸ்வாப்னோவுக்கு நன்றி ” எனக் கூறியதாக dhakatribune இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.


” 2015-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி முறையான உரிமம் இல்லாத காரணத்தினால், நாடு முழுவதும் இயந்திரமயமாக்கப்பட்ட மற்றும் பேட்டரி மூலம் இயக்கப்படும் ரிக்சாக்களை அந்நாட்டு உயர்நீதிமன்றம் தடை செய்தது. மேயர் தபோஷ் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி பேட்டரி மூலம் இயங்கும் ரிக்சாக்களை சட்டவிரோதமானது என்றும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பதாகவும் அறிவித்தார். இதையடுத்து, டாக்கா சவுத் சிட்டி கார்ப்பரேஷன் பேட்டரி ரிக்சாக்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக ” திடெய்லிஸ்டார் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.


பங்களாதேஷ் நாட்டின் ரிக்சா தொழிலாளி ஃபஸ்லூர் தன் வாகனம் பறிக்கப்பட்ட போது கண்ணீர் விடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான பிறகு அவருக்காக உதவிகள் தேடி வந்துள்ளன. ஒரு நிறுவனம் அவருக்கு இரண்டு ரிக்சாக்களை வழங்க முன்வந்ததோடு, அவரின் கனவான வீட்டு விநியோக சேவை பணியையும் அளித்து இருக்கிறது.


Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader