இனி வங்கிகள் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டும் இயங்குமா ?
பரவிய செய்தி
அதிரடி உத்தரவு !
வங்கிகளுக்கு இனி வாரத்தில் 5 வேலை நாட்கள் மட்டுமே . அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை.
மதிப்பீடு
விளக்கம்
வங்கிகளுக்கு வாரத்தில் 6 வேலை நாட்கள் மற்றும் இரண்டாவது, நான்காவது வாரத்தில் மட்டும் சனிக்கிழமை விடுமுறை என நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இனி வங்கிகளுக்கு வாரத்தில் 5 வேலை நாட்கள் மட்டுமே என்ற செய்தி சமூக வலைதளங்களில், இணைய செய்திகளில் பரவி வருகிறது.
அதில், இனி வாரத்தில் 5 வேலை நாட்கள் மட்டுமே வங்கி இயங்கும் , வேலை நேரம் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை என்றும் கூறியுள்ளனர். மேலும், இதை நடைமுறைப்படுத்த ஆர்.பி.ஐ ஒப்புதல் அளித்து உள்ளதாகவும், வருகிற ஜூன் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறி வருகின்றனர்.
ஆனால், வங்கிகளின் வேலை நாட்கள் குறித்து ஊடகங்களில், சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளுக்கு இந்தியன் ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயாள் அறிக்கையில், ” சில ஊடகங்களில் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் பெயரில் வங்கிகளுக்கு 5 வேலை நாட்கள் மட்டுமே என செய்திகள் வெளியாகி வருகிறது. இவ்வாறு வெளியாகும் தகவல்கள் உண்மையில் சரியானது இல்லை. அவ்வாறான அறிவிப்புகள் எதையும் ஆர்.பி.ஐ வெளியிடவில்லை” எனத் தெரிவித்து உள்ளார்.
பல ஆண்டுகளாகவே வங்கியின் வேலை நாட்கள் குறித்த தவறான செய்திகள் தொடர்ச்சியாக பரவி வருகின்றன. தற்போது மீண்டும் பரவிய வதந்திகளுக்கு ஆர்.பி.ஐ மறுப்பு தெரிவித்து உள்ளது.