பாரத் அரிசி திட்டத்தில் பயன் அடைந்தவர் என பாஜகவினர் பரப்பும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!
பரவிய செய்தி
மோடியை வெறுக்கலாம், ஆனால் மோடி உன் மீது அன்பு செலுத்துகிறார்.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் உணவு தானியங்களின் விலை கடுமையாக உயர்வதையடுத்து ஒன்றிய அரசு மானிய விலையில் ’பாரத் கோதுமை மாவு’, ’பாரத் பருப்பு’ என உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது ’பாரத் அரிசி’ என்ற பெயரில் ஒரு கிலோ அரிசி 29 ரூபாய்க்கு விற்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
பார்றா…. pic.twitter.com/85DC9Gjj99
— பாரதி கண்ணம்மா,जय श्री राम (@vanamadevi) February 8, 2024
இத்திட்டத்தில் பயன் அடைந்தவர் என பைக்கில் செல்லும் இஸ்லாமியப் பெண் ஒருவரின் புகைப்படத்தை மீஞ்சூர் சலீம் உட்பட பாஜக ஆதரவாளர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்புகின்றனர். பரவக் கூடிய படத்தில் உள்ள பையில் மோடியின் படமும் அதற்குக் கீழே ரூ.29 என்றும் உள்ளது.
பேசும் படம் pic.twitter.com/hldbo0RFqD
— மினி மோகன் (@Mini52614198) February 12, 2024
உண்மை என்ன?
பரவக் கூடிய படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், உத்தரப் பிரதேச வாகன எண் இடம்பெற்ற வாகனத்தில் செல்பவர்களின் புகைப்படம் 2023 ஜூன் மாதமே சமூக வலைத்தளங்களில் இருப்பதைக் காண முடிந்தது. ஆனால், அதில் ரூ.29 என எழுதப்படவில்லை. அந்த எண் போலியாக எடிட் செய்யப்பட்டுள்ளது. மேலும், பாரத் அரிசி திட்டம் இம்மாதம் (பிப்.2024) தான் தொடங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்கொண்டு பரவக் கூடிய படம் குறித்துத் தேடியதில், ‘Getty Images’ தளத்தில் இதே போன்று மோடியின் படம் போட்ட பையின் புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளது. 2021, ஆகஸ்டு மாதம் பதிவிடப்பட்டுள்ள அப்படத்தில் ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ அதாவது ‘பிரதமர் – ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்பு திட்டம்’ 2020ம் ஆண்டு கொரோனா காலத்தில் ஏழைக் குடும்பங்களுக்கு 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கத் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் காலக்கெடு தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், ஜனவரி 1, 2024 முதல் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இத்திட்டத்தில் தொடர்பாக பாஜக-வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தன் லால் கட்டாரியா 2021, ஆகஸ்ட் மாதம் புகைப்படம் ஒன்றை அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதிலும் பரவக் கூடிய படத்தில் இருப்பது போன்ற பையினை மக்கள் கையில் வைத்துள்ளனர்.
Under the ‘Pradhan Mantri Garib Anna Kalyan Yojana’ being run by PM @narendramodi ji , about 9 crore 99 lakh 97 thousand 815 quintals of free ration were distributed. #धन्यवाद_मोदीजी pic.twitter.com/fz2DIdPL54
— Rattan lal Kataria (@kataria4ambala) August 5, 2021
பாரத் அரிசி திட்டம் குறித்தும் தேடினோம். ஒரு கிலோ அரிசி ரூ.29 என்ற விலையில் 5 மற்றும் 10 கிலோ பைகளில் விற்கப்படுவது இம்மாதம் தான் தொடங்கப்பட்டுள்ளது. அப்பைகளில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறவில்லை.
Introducing #BharatRice : India’s commitment of Food Security at subsidized price!
Bharat Brand Rice can be purchased now from Kendriya Bhandar and cooperative outlets of NAFED & NCCF. pic.twitter.com/CuO0xrIFJg
— Ministry of Cooperation, Government of India (@MinOfCooperatn) February 9, 2024
இவற்றில் இருந்து ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டம் தொடர்பான படத்தில் ‘பாரத் அரிசி’ திட்ட விலை இருப்பது போன்று போலியாக எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், பாரத் அரிசி திட்டத்தில் பயன் அடைந்தாக பரவும் படம் போலியாக எடிட் செய்யப்பட்டது. அது ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்துடன் தொடர்புடைய பை புகைப்படம் என்பதை அறிய முடிகிறது.