தோனியை போல் ரோஹித் சர்மாவும் பகவத் கீதையுடன் இருப்பதாகப் பரப்பப்படும் ஃபோட்டோஷாப் புகைப்படம் !

பரவிய செய்தி

கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு சிறந்த கேப்டன்கள். நீங்கள் சரியான பாதையில் செல்லும்போது எப்போதும் வெற்றி கிடைக்கும். பகவத் கீதையின் சக்தி.

Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

கடந்த மே 29 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இதனை அடுத்து தனது மும்பை பயணத்தின் போது தோனி தனது காரின் முன்பக்கத்தில் அமர்ந்து பகவத் கீதை புத்தகத்தை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமீபத்தில் வைரலான நிலையில், தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவும் கையில் பகவத் கீதையை வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Archive Link

அதில், “கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு சிறந்த கேப்டன்கள்; நீங்கள் சரியான பாதையில் இருக்கும்போது எப்போதும் வெற்றியே பெறுவீர்கள்; இது தான் பகவத் கீதையின் சக்தி.” என்று குறிப்பிட்டு ரோஹித் சர்மா மற்றும் தோனியின் புகைப்படத்தை இணைத்து பரப்பி வருவதைக் காண முடிந்தது.

உண்மை என்ன ?

பரவி வரும் புகைப்படங்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், கடந்த ஜூன் 1 அன்று மகேந்திர சிங் தோனி பகவத் கீதை வைத்திருப்பது போன்ற பரவி வரும் புகைப்படம் ட்விட்டர் பக்கங்களில் வைரலாகி செய்தி சேனல்களிலும் வெளியானது.

Archive Link

மேலும் பரவி வரும் புகைப்படத்தில் உள்ளவாறு ரோகித் சர்மா பகவத் கீதை வைத்திருப்பது உண்மையா என்று அவரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளபக்கங்களில் தேடியதில், 2020 அக்டோபர் 30 அன்று அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இப்புகைப்படத்தை காண முடிந்தது.

Archive Link:

அவர் கையில் இருப்பது “ஜதின் பரஞ்சபே” எழுதிய ‘Cricket Drona: For The Love Of Vasoo: For the Love of Vasoo Paranjape‘ புத்தகம் என்பதையும், இந்தப் புத்தகம் புகழ்பெற்ற பயிற்சியாளர் வாசூ பரஞ்சபே பற்றியது என்பதையும் அறிய முடிந்தது. மேலும் கவாஸ்கர், டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் வாழ்க்கையை வடிவமைப்பதில் பரஞ்சபேவின் தாக்கம் பற்றி இந்த புத்தகம் விவரிக்கிறது என்பதையும் அறிய முடிந்தது.

மேலும் அப்பதிவில், “கிரிக்கெட் சகோதரத்துவத்தில் ஒரு சிறந்த மனிதரைப் பற்றி படிக்க வேண்டிய புத்தகம் இது. வாசு சார் என் வாழ்க்கையை சரியான பாதையில் வழிநடத்தி செல்வதில் முக்கிய பங்கு ஆற்றியவர்களில் ஒருவராக இருக்கிறார். மேலும் எனது இளமை நாட்களில் எனக்கு நம்பிக்கையை அளித்தார். இது எனக்கு பெரிதும் உதவியது.” என்று ரோஹித் சர்மா குறிப்பிட்டுள்ளதை காண முடிந்தது.

இதன் மூலம் ரோஹித் சர்மா பகவத் கீதை வைத்திருப்பது போன்று பரவி வரும் புகைப்படம், 2020-இல் அவர் பகிர்ந்துள்ள பழைய புகைப்படம் என்பதையும், அதை தற்போது போட்டோஷாப் செய்து பரப்பி வருகின்றனர் என்பதையும் உறுதி செய்ய முடிந்தது.

முடிவு :

நம் தேடலில், சமூக வலைதளங்களில் பரவி வரும் மகேந்திர சிங் தோனி பகவத் கீதை உடன் இருக்கும் புகைப்படம் உண்மையானது என்பதையும், ரோஹித் சர்மா பகவத் கீதை வைத்திருப்பது போன்ற புகைப்படம் எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படம் என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader