பீகாரில் 8 வயது சிறுமிக்கும் 28 வயது இளைஞருக்கும் திருமணம் நடந்த புகைப்படமா ?
பரவிய செய்தி
இதுஒரு கல்யாண போட்டோ மாப்பிள்ளைக்கு 28வயது பெண்ணுக்கு 8 வயது இந்தியா பீகாரில் நடந்த திருமணம் பெண்ணின் பெற்றோருக்கு கடுமையான வறுமையாம் அதனால் இந்த திருமணமாம் இதை ஒரு அரபு நாட்டிலோ அல்லது முஸ்லிம் சமூகத்திலோ எங்கவாது நடந்தால் இந்த. ஊடகங்கள் இதுதான் மிகப்பெரிய. முக்கிய செய்தியாக இருக்கும்.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் 28 வயது இளைஞனுக்கும் 8 வயது சிறுமிக்கும் திருமணம் நடந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் என திருமண கோலத்தில் தம்பதிகள் வாகனத்தில் செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
8 வயது சிறுமி என வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், இந்திய அளவில் பல முன்னணி செய்திகளில் கூட 8 வயது சிறுமிக்கும் 28 வயது இளைஞருக்கும் திருமணம் நடந்ததாக இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
எனினும், மேற்கொண்டு தேடுகையில், Dainik bhaskar எனும் இணையதளத்தில் வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் இருக்கும் பெண் தன்னைப் பற்றி பரவும் தவறான தகவல்கள் குறித்து தன் கணவருடன் விளக்கம் தெரிவிக்கும் வீடியோ வெளியிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
அந்த பெண்ணின் பெயர் தானு குமாரி என்றும், 2002 ஜனவரி 1-ம் தேதி தாம் பிறந்ததாகவும், தவறான தகவலை பரப்ப வேண்டாம் என அந்த பெண் கேட்டுக் கொண்டதாக வெளியாகி இருக்கிறது. தானு குமாரி பேசும் வீடியோ பீகார் நியூஸ் 18 செய்தியின் ட்விட்டர் பக்கத்தில் மே 28-ம் தேதி வெளியாகி இருக்கிறது.
नवादा की तनु नाबालिग नहीं, बालिग है। सुनिए खुद तनु की जुबानी
18 साल से ज्यादा उम्र में हुई तनु की शादी
देश-दुनिया में वायरल हो रही थी तनु की तस्वीर pic.twitter.com/GWV5W0DKqW— News18 Bihar (@News18Bihar) May 28, 2021
Mooknayak நிறுவனர் மீனா கொத்வால் என்பவர் அவர்களை தொடர்புக் கொண்டு தானு மற்றும் அவரது கணவரின் புகைப்படங்கள் உடன் விளக்கி ட்வீட் செய்து இருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை குறித்த விளக்கத்தை தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் மற்றும் பீகாரின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை தரப்பில் அறிக்கைகளாக வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், பீகாரில் 8 வயது சிறுமிக்கும் 28 வயது இளைஞருக்கும் திருமணம் நடந்ததாக பரவும் புகைப்படம் தவறானது. அதில் இருக்கும் பெண்ணிற்கு 8 வயது அல்ல, 19 வயது ஆகி உள்ளது என்பதையும், புரளி செய்தி சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் வழியாக அரசு விசாரணை செய்து தெளிவுப்படுத்தும் அளவிற்கு சென்றுள்ளது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.