பீகாரில் அமித்ஷா காரின் மீது கல்லெறிந்ததாக பரவும் வீடியோவின் உண்மைத்தன்மை ?
பரவிய செய்தி
தேர்தல் பிரச்சாரம் செய்ய பீகார் சென்ற அமித்ஷா கார் மீது கல்லெறிந்து மக்கள் எதிர்ப்பு; சீன ராணுவத்தின் தாக்குதல் கொரோனா பாதிப்புகளை அரசியல் லாபத்துக்காக திசை திருப்புவதாக குற்றச்சாட்டு!
மதிப்பீடு
விளக்கம்
பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா சென்ற வாகனத்தின் மீது மக்கள் கல் எறிந்து தாக்கியதாக மேற்காணும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஜூன் மாதம் தொடக்கத்தில் பீகார், மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வரவுள்ள தேர்தலுக்காக பாஜக சார்பில் அமித்ஷா விர்ச்சுவல் பேரணியை மேற்கொண்டு வந்தார். இதற்காக மாநிலங்கள் முழுவதும் பாஜக கட்சி சார்பில் எல்.இ.டி ஸ்க்ரீன்கள், டிவிக்கள் பொருத்தப்பட்டன.
மேலும் படிக்க : பாஜக சார்பில் 70,000 டிவிக்களைப் பொருத்தி அமித்ஷா விர்ச்சுவல் பேரணி.
அமித்ஷா மேற்கொண்ட பேரணி நேரடியாக சென்றது அல்ல, அது விர்ச்சுவல் பிரச்சாரம் மட்டுமே. சமீபத்தில் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் கட்சிகளின் பிரச்சாரத்திற்க்கு வாய்ப்புகள் இல்லை. ஆக, வைரல் செய்யப்படும் வீடியோ பழைய வீடியோவாக இருக்கவே வாய்ப்பு உள்ளது.
வீடியோவின் தொடக்கத்தில் வரும் காட்சியை ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் 2018 ஜனவரி 13-ம் தேதி நியூஸ் 18 செய்தியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வாகனத்தில் சென்ற போது கிராம மக்கள் கற்களைக் கொண்டு தாக்கியதாக அதே வீடியோ வெளியாகி இருக்கிறது.
2018 ஜனவரி 12-ம் தேதி வெளியான ஏஎன்ஐ செய்தியில், ” பீகாரின் பக்சார் பகுதியில் நிதிஷ் குமார் மேற்கொண்ட விகாஸ் சமிக்சா யாத்ராவின் போது கற்களை கொண்டு தாக்கி உள்ளார். இதில் முதல்வர் நிதிஷ் குமாருக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை, பாதுகாப்பில் இருந்த சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக ” கூறப்பட்டுள்ளது.
முடிவு :
நம்முடைய தேடலில், பீகாரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற அமித்ஷா காரின் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியதாக பரவும் வீடியோ தவறானது. கடந்த 2018-ம் ஆண்டு பீகார் முதல்வர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தற்போது தவறாக பரப்பி வருகிறார்கள் என்பதை அறிய முடிந்தது.