பீகாரில் பாஜக கூட்டணி அமைச்சர்களை தாக்கியதாக பரவும் பழைய வீடியோ!
பரவிய செய்தி
பீகார் தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக கூட்டணி அமைச்சர்களை கல்லால் அடித்து விரட்டும் பீகார் மக்கள்.
மதிப்பீடு
விளக்கம்
2020-ம் ஆண்டு பீகார் தேர்தலுக்காக பிரச்சாரத்திற்கு சென்ற பாஜகவின் கூட்டணி அமைச்சர்களை அங்குள்ள மக்கள் கல்லால் அடித்து விரட்டும் காட்சி என இவ்வீடியோ உலாவி வருகிறது.
கடந்த ஜூன் மாதம், பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா சென்ற வாகனத்தின் மீது மக்கள் கல் எறிந்து தாக்கியதாக மேற்காணும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அப்போதே, மக்கள் கற்களை கொண்டு தாக்குவது அமித்ஷா சென்ற வாகனம் இல்லை என யூடர்ன் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
விரிவாக படிக்க : பீகாரில் அமித்ஷா காரின் மீது கல்லெறிந்ததாக பரவும் வீடியோவின் உண்மைத்தன்மை ?
வைரலாகும் வீடியோவின் தொடக்கத்தில் வரும் காட்சியை ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2018 ஜனவரி 13-ம் தேதி நியூஸ் 18 செய்தியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வாகனத்தில் சென்ற போது கிராம மக்கள் கற்களைக் கொண்டு தாக்கியதாக அதே வீடியோ வெளியாகி இருக்கிறது.
2018 ஜனவரி 12-ம் தேதி வெளியான ஏஎன்ஐ செய்தியில், ” பீகாரின் பக்சார் பகுதியில் நிதிஷ் குமார் மேற்கொண்ட விகாஸ் சமிக்சா யாத்ராவின் போது மக்கள் கற்களை கொண்டு தாக்கி உள்ளார்கள். இதில் முதல்வர் நிதிஷ் குமாருக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை, பாதுகாப்பில் இருந்த சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக ” கூறப்பட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், 2018-ல் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் விகாஸ் சமிக்சா யாத்ராவை மேற்கொண்ட போது வாகனத்தின் மீது மக்கள் கற்களை கொண்டு தாக்கி உள்ளனர். அதே வீடியோவை, 2020 பீகார் தேர்தலுக்கு சென்ற பாஜக கூட்டணி அமைச்சர்கள் மீது நடத்திய தாக்குதல் என தவறாக பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.