உ.பியில் இளைஞர் கையில் துப்பாக்கியைக் கொடுத்து கைது செய்யும் காவல்துறையினர் எனப் பரவும் தவறான செய்தி !

பரவிய செய்தி

ஒரு முஸ்லீம் இளைஞரிடம் போக்குவரத்து காவல் காவித்துறையே வலுக்கட்டாயமாக கைதுப்பாக்கியை கொடுத்து குற்றவாளியாக்கி கைது செய்கிறார்கள் , இதைப் பற்றி பேச பாஜக முஸ்லிம் தலைவர்களுக்கு தைரியம் இருக்கிறதா?

Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

த்திரப்பிரதேசத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த முஸ்லீம் இளைஞர் ஒருவரிடம் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைத்துப்பாக்கியைக் கொடுத்து கைது செய்ததாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும் அந்த வீடியோவில், காவல்துறை அதிகாரி ஒருவர் தன்னிடம் உள்ள துப்பாக்கியை ஒரு இளைஞரிடம் கொடுப்பது போன்றும், அதற்கு அந்த இளைஞர் தன்னுடையது அல்ல என்று வாங்க மறுப்பது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ ABP Ganga யூடியூப் பக்கத்தில் “கான்பூர் செய்தி: துப்பாக்கியுடன் பைக் ஓட்டி வந்தவரை போக்குவரத்து காவலர்கள் பிடித்தனர். ஏபிபி கங்கா லைவ்” என்ற தலைப்புடன் கடந்த நவம்பர் 30 அன்று வெளியிடப்பட்டுள்ளதைக் காண முடிந்தது.

மேலும் தேடியதில், இந்த வீடியோவோடு தொடர்புடைய மற்றொரு வீடியோவும் கிடைத்தது. அதில் இருசக்கர வாகனத்தில் வரும் இளைஞர் ஒருவர் சாலையில் கீழே விழுவது போன்றும், அவருடைய வாகனத்திற்கு அருகில் கீழே விழுந்து கிடக்கும் துப்பாக்கியை போக்குவரத்து காவலர் ஒருவர் ஓடி வந்து கைப்பற்றுவது போன்றும் உள்ள காட்சிகளைக் காண முடிந்தது. இதன் மூலம் அந்த துப்பாக்கி இருசக்கர வாகனத்தில் இருந்து தான் கீழே விழுந்துள்ளது என்பது தெளிவாகிறது.

பரவி வரும் செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து கடந்த நவம்பர் 30 அன்று POLICE COMMISSIONERATE KANPUR NAGAR தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், “உத்தரபிரதேச காவல்துறையானது 29.11.2023 அன்று அஜீஸ் ரெஹ்மானின் மகன் ரூமி என்கிற தௌஹித் அலி, 135/524 முன்ஷி பூர்வா காவல் நிலையம் பாபுபூர்வா கான்பூர் நகர், வயது 21, சட்டவிரோத ஆயுதம் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்ததற்காக கைது செய்தது.

மேற்படி சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. மேலே உள்ள காணொளியை முழுமையாக ஆராய்ந்து, மாநகராட்சியின் கேமராக்களை பார்த்தபோது என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது. குற்றம் சாட்டப்பட்ட தௌஹித் அலி என்ற ரூமி மேற்குறிப்பிட்ட மோட்டார் சைக்கிளில் காந்தகர் பகுதியில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சாலை சந்திப்பில் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுகிறார். விழும் போது குற்றம் சாட்டப்பட்டவர் சட்டவிரோத ஆயுதத்தையும் வைத்துள்ளார்.

தட்மில் சந்திப்பில் இருக்கும் போக்குவரத்து காவலர்கள் மற்றும் உள்ளூர் காவலர்களால் குற்றம் சாட்டப்பட்டவர் உடனடியாக கைது செய்யப்படுகிறார். குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து விழுந்த சட்டவிரோத ஆயுதம் கைப்பற்றப்பட்டது தெளிவாகிறது. பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலான வீடியோ குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே இவர் மீது எப்ஐஆர் எண். 78/2021 பிரிவு 302/201-ன் படி பாபுபூர்வா கான்பூர் நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: துப்பாக்கியில் தோட்டா நிரப்ப தெரியாமல் அண்ணாமலை முழித்ததாக தவறாகப் பரவும் உபி வீடியோ !

மேலும் படிக்க: உ.பியில் பசு மாட்டைத் தாக்கிய நபரை காவல் துறையினர் தாக்கியதாகப் பரப்பப்படும் பொய் !

முடிவு:

நம் தேடலில், உபியில் முஸ்லீம் இளைஞரிடம் வலுக்கட்டாயமாக துப்பாக்கியைக் கொடுத்து கைது செய்யும் காவல்துறையினர் எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதையும், துப்பாக்கியைக் கொண்டு வந்ததே கைது செய்யப்பட்ட அந்த இளைஞர் தான் என்பதையும் உறுதிப்படுத்த முடிகிறது.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader