ஒரு வார்டில் தோற்றால் கூட எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என வானதி கூறியதாகப் போலிச் செய்தி !
பரவிய செய்தி
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து உள்ளாட்சி வார்டுகளிலும் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற செய்வேன். ஒரு வார்டில் தோற்றால் கூட எனது M.L.A பதவியை ராஜினாமா செய்வேன் – கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன்.
மதிப்பீடு
விளக்கம்
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வார்டில் பாஜக தோற்றாலும் தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என வானதி சீனிவாசன் கூறியதாக புதியதலைமுறை நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
உண்மை என்ன ?
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கேட்ட இடங்கள் அதிமுக தரப்பில் அளிக்கவில்லை. இதனால் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக அண்ணாமலை அறிவித்தார். இந்நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி இல்லாமல் போனதற்கு நயினார் நாகேந்திரன் அதிமுக குறித்து பேசியதே காரணம் எனக் கூறுவதற்கு பாஜக அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் குறித்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” கோவையில் அனைத்து வார்டுகளிலும் பாஜக போட்டியிடுவதற்கான தயார் பணிகள் நடைபெற்று வருகிறது ” எனக் குறிப்பிட்டு இருக்கிறார். தோல்வி அடைந்தால் பதவியை ராஜினாமா செய்வதாக எங்கும் கூறவில்லை.
அதேபோல், புதியதலைமுறை சேனலின் முகநூல் பக்கத்தில், வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு வெளியாகவில்லை. இதுகுறித்து, புதியதலைமுறையின் இணையதளப் பிரிவைத் தொடர்பு கொண்டு பேசுகையில், இது போலியானது, நாங்கள் வெளியிடவில்லை ” எனத் தெரிவித்தனர்.
முடிவு :
நம் தேடலில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வார்டில் பாஜக தோற்றால் கூட எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என வானதி ஸ்ரீனிவாசன் கூறியதாக வைரலாகும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.