மு.க.ஸ்டாலின் புகழ்ச்சி, மோடி, அமித்ஷா மதவெறியர்கள்.. திருந்தி வாழ்வேன் என்றாரா எச்.ராஜா ?
பரவிய செய்தி
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை போல் உலகிலேயே எந்தத் தலைவரும் சிறப்பான முறையில் செயல்படுவதில்லை. மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் போன்ற மதவெறியர்களால் நாசமாய் போனேன். திருந்திவாழ முயற்சிப்பேன். – எச்.ராஜா, பாஜக மூத்த தலைவர்
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்தும், பாஜக தலைவர்களாக மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோரை மதவெறியர்கள் எனக் குறிப்பிட்டு பேசியதாக பிபிசி தமிழ் உடைய நியூஸ் கார்டு ஒன்றை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.
தமிழ் திரைப்பட இயக்குனர் நவீன் தன் ட்விட்டர் பக்கத்தில், ” உண்மை செய்தியா ? ” என அதே நியூஸ் கார்டை பகிர்ந்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.
உண்மை என்ன ?
செப்டம்பர் 13-ம் தேதி பிபிசி நியூஸ் தமிழ் முகநூல் பக்கத்தில், ” தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை போல் இந்தியாவில் எந்த முதல்வரும் பொறுப்பற்ற முறையில் செயல்படுவதில்லை. பிரிவினைவாதமே இவரது அரசியல் பின்னணி, அதனால்தான் சட்டவிரோதமாக செயல்படுகிறார். – எச்.ராஜா, பாஜக மூத்த தலைவர் ” என நியூஸ் கார்டு வெளியாகி இருக்கிறது.
“பிரிவினைவாதமே தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் அரசியல் பின்னணி, அதனால்தான் அவர் சட்டவிரோதமாக செயல்படுகிறார்” என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கடுமையாக விமர்சித்து இருக்கிறார். பிபிசி வெளியிட்ட மேற்காணும் நியூஸ் கார்டில் மு.க.ஸ்டாலினை புகழ்வது போன்றும், மோடி மற்றும் அமித்ஷாவை கடுமையாக விமர்சித்தது போன்று எடிட் செய்து இருக்கிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்தும், மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் போன்ற மதவெறியர்களால் நாசமாய் போனேன் எனப் பேசியதாக பரப்பப்படும் பிபிசி தமிழ் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.