தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்ந்ததாக பழைய செய்தியைப் பரப்பும் பாஜகவினர்!
![](https://youturn.in/wp-content/uploads/2024/06/tn-electricity-rate-hike-fC-1920x1080.jpg)
பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் திமுக தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தனது பெரும்பான்மையை தமிழ்நாட்டில் நிரூபித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிந்தவுடனேயே தமிழ்நாடு அரசு புதிய மின்கட்டணம் உயர்வை அமல்படுத்தியதாகக் கூறி, “புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது” என்ற தலைப்பில் புதிய தலைமுறையின் ஒரு நியூஸ் கார்டும், யூனிட் வாரியாக “மின்சார கட்டண உயர்வு விவரம்” என்ற தலைப்பில் மற்றொரு நியூஸ் கார்டும் சமூக ஊடகங்களில் பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்படுகின்றன,
திமுகவுக்கு ஓட்டு போடாதவர்கள் அல்ல ஓட்டு போட்டவர்களும் காறி துப்பும் ஆட்சி இது pic.twitter.com/0XGF5kDhBl
— இந்திராணி சுடலைமுத்து – Say No To Drugs & Dmk (@IndiraniSudala1) May 9, 2024
உண்மை என்ன?
பரவி வரும் புதிய மின்கட்டணம் உயர்வு குறித்து தமிழ்நாடு அரசின் TANGEDCO) வலைத்தளத்தில் தேடிப்பார்த்ததில் இதுகுறித்து எந்தவித செய்தியும் வெளியாகவில்லை என தெரியவந்தது.
இதே போன்று TANGEDCOவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்திலும் தேடினோம். TANGEDCO எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து கடந்த மே 09ஆம் தேதி அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதில், “கடந்த சில நாட்களாக உலா வரும் மின் கட்டண செய்திகள் பற்றிய உண்மை தன்மை: அவை முற்றிலும் பழைய செய்தி. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய எண் 07 / 9.9.2022 தேதியின் படியான கட்டண விகிதம்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்மூலம் இது 2022ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பழைய செய்தி என்பதை உறுதிபடுத்த முடிந்தது.
கடந்த சில நாட்களாக உலா வரும் மின் கட்டண செய்திகள் பற்றிய உண்மை தன்மை:
அவை முற்றிலும் பழைய செய்தி.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை
ஆணைய எண் 07 / 9.9.2022 தேதியின் படியான கட்டண விகிதம்.It has been observed some recent tweets on tarrif and its clarified that they are based an… pic.twitter.com/pHBms79xba
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) May 9, 2024
மேலும் இதுகுறித்து புதிய மின்கட்டணம் உயர்வு என்ற தலைப்பில் 2022ஆம் ஆண்டே பல செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
இந்து தமிழ் திசை இதுகுறித்து 2022 செப்டம்பர் 11 அன்று வெளியிட்டிருந்த செய்தியில்,
“தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, மின் கட்டண உயர்வு நேற்று (2022 செப் 10 அன்று) அமலுக்கு வந்தது. வீடுகளுக்கான மின் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் தற்போது பரவும் அந்த நியூஸ்கார்டுகளில் ஒன்று கோட்டக்குப்பம் என்ற வலைதளப் பக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையிலிருந்தும், மற்றொன்று புதிய தலைமுறை 2022ஆம் ஆண்டில் வெளியிட்டிருந்த வீடியோவிலிருந்தும் எடுக்கப்பட்டு, தேதி குறிப்பிடாமல் தற்போது வெளியிட்ட செய்தி போன்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்ந்ததாக பாஜகவினர் பரப்பும் செய்திகள் 2022 ஆண்டில் வெளியிடப்பட்ட பழைய செய்தி என்பதை அறிய முடிகிறது.