போலி செய்தி பற்றி பேசிய அண்ணாமலை… அதை நியூஸ் 7 கார்டில் எடிட் செய்து பரப்பும் ஆதரவாளர்கள் !
பரவிய செய்தி
மீடியா போலியான செய்தியை பரப்புகிறது என்று கவலைப்பட வேண்டாம். அடுத்த 6 மாதத்தில் மீடியாவின் நிலையை பொறுத்திருந்து பாருங்கள் தெரியும் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
மதிப்பீடு
விளக்கம்
எல்.முருகன் இணை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு பாஜகவின் தலைவராக அண்ணாமலை அவர்கள் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், மீடியா போலியான செய்தியை பரப்புகிறது என்று கவலைப்பட வேண்டாம். அடுத்த 6 மாதத்தில் மீடியாவின் நிலையை பொறுத்திருந்து பாருங்கள் தெரியும் என அண்ணாமலை கூறியதை நியூஸ் 7 தமிழ் நிறுவனம் வெளியிட்டதாக நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
நியூஸ் 7 தமிழ் செய்தியின் முகநூல் பக்கத்தை ஆராய்கையில், ஜூலை 14-ம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி அதே புகைப்படத்துடன் இருந்த நியூஸ் கார்டு கிடைத்தது. ஆனால், அதில் இருந்த செய்தி வேறாக இருந்தது.
” 2024 பாராளுமன்றத்தில் தமிழ்நாடு பாஜக எம்பிக்கள் பலர் இடம் பெற்றிருப்பார்கள்: இது ஆரம்பம் மட்டும்தான் கடுமையாக உழைப்பும்: கட்சியை வளர்ப்போம், ஆண்டவன் நம் பக்கம் ! – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ” என்ற செய்தியே இடம்பெற்று இருந்தது. மேலும், வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டில் தேதி இல்லாததையும் பார்க்கலாம்.
இது தொடர்பாக நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் பிரிவைத் தொடர்பு கொண்டு பேசுகையில், ” வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு போலியானது. நாங்கள் அதை வெளியிடவில்லை ” எனத் தெரிவித்து இருந்தனர்.
நியூஸ் 7 தமிழ் சேனல் இப்படியொரு நியூஸ் கார்டை வெளியிடவில்லை. எனினும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீடியா பற்றி பேசியது உண்மையே.
” இந்த மீடியாவை நீங்கள் மறந்து விடுங்கள். நம்மளை பத்தி பொய்யா செய்தி போடுறாங்கள். என்ன பண்ணலாம். அதையெல்லாம் நீங்கள் மறந்து விடுங்கள். அடுத்த ஒரு 6 மாதத்திற்குள் பார்ப்பீர்கள், அந்த மீடியாவை நாம் கன்ட்ரோல் பண்ணலாம், கையில் எடுக்கலாம். காரணம் என்னவென்றால், தொடர்ந்து பொய்யான விசயங்களை எந்தவொரு ஊடகமும் சொல்ல முடியாது. இத்தனைக்கும், முன்னாள் மாநில தலைவராக இருந்த முருகன் ஐயா அவர்கள் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் அமைச்சராக உள்ளார். எல்லா ஊடகங்களும் அவருக்கு கீழே தான் வர போகுது. தொடர்ந்து தப்பான செய்தியை செய்ய முடியாது. அதை வைத்து அரசியல் செய்ய முடியாது ” என அண்ணாமலை பேசி இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், மீடியா போலியான செய்தியை பரப்புகிறது என்று கவலைப்பட வேண்டாம். அடுத்த 6 மாதத்தில் மீடியாவின் நிலையை பொறுத்திருந்து பாருங்கள் தெரியும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது உண்மையே. ஆனால், அதை நியூஸ் 7 தமிழ் நிறுவனம் வெளியிட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.