பாஜகவில் இருந்து விலகி 50 லட்சம் பேர் பாமகவில் இணைந்ததாக பரப்பப்படும் பழைய மாநாடு படம் !
பரவிய செய்தி
பாஜாக-வில் இருந்து விலகி இந்தியா முழுவதும் 50 லட்சம் இளைஞர்கள் பாமக-வில் இணைந்தனர்.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய 50 லட்சம் இளைஞர்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்ததாக இப்படத்தை பாமக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.
பாஜாக-வில் இருந்து விலகி இந்தியா முழுவதும் 50 லட்சம் இளைஞர்கள் பாமக- வில் இணைந்தனர்…. 💙💛❤️ https://t.co/pwa3JVnoam pic.twitter.com/NVuowmFMaY
— ༆தங்கமகன் 100࿐ (@ArunRose_100) June 6, 2022
உண்மை என்ன ?
சமீபத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ” இளைஞர்கள் பாஜகவிற்கு செல்வதை தடுக்க வேண்டும் ” எனப் பேசியது அரசியல் வட்டராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பாஜக ஆதரவாளர்கள் தரப்பிலும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில்தான், பாஜகவில் இருந்து விலகிய இளைஞர்கள் 50 லட்சம் பேர் பாமகவில் இணைந்ததாக இப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள். இப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அது 2013-ல் வன்னியர் இளைஞர்கள் மாநாட்டின் போது எடுக்கப்பட்டதாக flickr இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
2013 ஏப்ரல் 25-ம் தேதி மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கத்தின் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு செல்லும் போதுதான் மரக்காணம் அருகே கலவரம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், 2013-ல் வன்னியர் மாநாட்டில் எடுக்கப்பட்ட படத்தை பாஜக-வில் இருந்து விலகி இந்தியா முழுவதும் 50 லட்சம் இளைஞர்கள் பாமக-வில் இணைந்ததாக தவறாக பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.