பாஜகவிற்கு எதிராக பழைய வதந்திகளை மீண்டும் பரப்பும் சூர்யா சேவியர் !
பரவிய செய்தி
போட்டாச்சு போட்டாச்சு போ போ. குஜராத்தில் ஜெயிச்சாச்சுன்னு எழுதிக்கோ. ரௌடிகளின் கட்டுப்பாட்டில் குஜராத் மாநில மக்கள்.
மதிப்பீடு
விளக்கம்
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிய பாஜக மீண்டும் ஆட்சியைத் தொடர்கிறது. இந்நிலையில், குஜராத் தேர்தலில் ரவுடிகள் மக்களை மிரட்டி ஒட்டு செலுத்தியதாகவும், இப்படி கள்ள ஓட்டு போட்டு தான் பாஜக வெற்றிப் பெற்றதாகவும் 29 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
திராவிட ஆதரவாளரும், புத்தக எழுத்தாளருமான சூர்யா சேவியர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், குஜராத்தில் பாஜகவினர் வாக்குப்பதிவு மையத்தை கைப்பற்றியதாக இவ்வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.
உண்மை என்ன ?
கடந்த மார்ச் மாதம் 5 மாநிலத் தேர்தல் நடைபெற்ற போதே பாஜகவைக் குறிப்பிட்டு இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அப்போதே, இந்த வீடியோ மேற்கு வங்க மாநிலத்தின் நகராட்சித் தேர்தலில் வாக்குப்பதிவின் போது எடுக்கப்பட்டது என கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
2022 பிப்ரவரி 27-ம் தேதி TV9Bangla எனும் செய்தியில், ” மேற்கு வங்கத்தின் தெற்கு தும்தும் நகராட்சியின் 33வது வார்டில் உள்ள லேக்வியூ பள்ளியில் நடைபெற்ற வாக்குப்பதிவின் போது, தேர்தல் முகவர் வாக்காளர்களை தடுத்து நிறுத்தி அவராகவே வாக்கு செலுத்தும் வீடியோ ” என வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க : Factcheck: மக்களைத் துரத்தி விட்டு ஓட்டு போடும் முகவரின் வைரல் வீடியோ.. எங்கு நிகழ்ந்தது ?
கே.டி.ராகவன் பேட்டி :
இதேபோல், ” அவாளோட கொள்கை எப்போதுமே தனித்து நிற்பது தான். நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஆனர். “தனித்து” ” எனக் கூறி தமிழகத்தில் தனித்துப்போட்டியிட்டால் 660 இடங்களில் ஜெயிப்போம்! பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் பேட்டி அளித்ததாக நியூஸ் பேப்பர் பக்கத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
ஆனால், 2020 செப்டம்பர் 5ம் தேதி விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.டி.ராகவன், தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகத் தனித்துப் போட்டியிட்டாலும் 60 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் தற்போதுவரை அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளது ” எனப் பேசியதாக வெளியான செய்தியில் எடிட் செய்து 660 தொகுதி எனத் தவறாகப் பரப்பி இருந்தனர். தற்போது கே.டி.ராகவன் பாஜகவின் பொதுச்செயலாளரும் இல்லை.
மேலும் படிக்க : கே.டி.ராகவன் 660 இடங்களில் ஜெயிப்போம் எனக் கூறினாரா ?
பிற வதந்திகள் :
இதேபோல், காசியில் பாஜகவினர் தமிழ் வளர்த்த லட்சணம் எனக் கூறி பாணி என எழுதப்பட்டு இருந்த தண்ணீர் பாட்டிலின் படத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். ஆனால், அது ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் தயாரிப்பின் பிராண்ட் பெயர் என நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : வைரலான “பாணி” எனும் தண்ணீர் பாட்டில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எனும் ஒன்றிய அரசு நிறுவனத்தின் தயாரிப்பு !
மேலும் படிக்க : செய்தியாளர்களைச் சந்திக்காத மோடி என மேயர் பிரியா கூறினாரா ?
இதேபோல், பத்திரிகையாளர்களை சந்திக்காத மோடி என மேயர் பிரியா கூறியதாக பரவிய போலி நியூஸ் கார்டை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
முடிவு :
நம் தேடலில், சூர்யா சேவியர் ட்விட்டர் பக்கத்தில் குஜராத் தேர்தலில் பாஜகவினர் கள்ள ஒட்டு போடுவதாக பதிவிட்டது மேற்கு வங்கத்தில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ. அதேபோல், தமிழகத்தில் தனித்துப்போட்டியிட்டால் 660 இடங்களில் ஜெயிப்போம் என கே.டி.ராகவன் கூறியதாக பதிவிட்டதும் எடிட் செய்யப்பட்ட பழைய பொய் செய்தி என அறிய முடிகிறது.