உத்தரப் பிரதேசத்தில் கள்ள ஓட்டுப் போட முயன்றவர்கள் கைது எனப் பரவும் பழைய வீடியோ!
பரவிய செய்தி
உபி . கள்ள ஓட்டு போட வந்தாளுக
மதிப்பீடு
விளக்கம்
நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டமாக நடத்தத் திட்டமிட்டு அதன் முதற்கட்ட வாக்குப் பதிவு நேற்றைய தினம் தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் உட்பட பல்வேறு மாநிலங்கள் சேர்த்து மொத்தம் 102 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 8 தொகுதிகளும் அடங்கும்.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் இரண்டு பெண்கள் புர்கா அணிந்து கள்ள ஓட்டுப் போட முயன்றதாக வீடியோ ஒன்று வலதுசாரிகளால் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். இதே வீடியோ 2022, பிப்ரவரி 15ம் தேதியும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதைக் காண முடிந்தது. அதில், ‘உத்தரப் பிரதேசம் ராம்பூரில் புர்கா அணிந்து கள்ள ஓட்டு செலுத்த முயன்ற பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Attempt of bogus voting by Burqa clad women in Rampur yest, beaten and arrested by Uttam Police from Uttar Pradesh. #HijabRow pic.twitter.com/eOinIdIZnq
— DEEWAN. (Modi Ka Parivar) (@Spoof_Junkey) February 15, 2022
இதனைக் கொண்டு மேற்கொண்டு தேடியதில், இது தொடர்பாக ‘Bhaskar’ தளத்தில் 2022ம் ஆண்டு செய்தி வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது. அதில், உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான வாக்குப் பதிவு நடந்து வரும் நிலையில், ராம்பூரில் உள்ள ஜி.ஆர்.பி. கல்லூரியில் கள்ள ஓட்டுப் போட புர்கா அணிந்த இரண்டு பெண்கள் முயன்றனர். முஸ்கான் மற்றும் ராணி என்ற அப்பெண்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக ‘NAV Bharat times’ தளத்திலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தாய் மற்றும் மகள் என்றும் அதில் ஒருவர் கள்ள ஓட்டை செலுத்தியதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றில் இருந்து இந்த வீடியோ 2022, உத்தரப் பிரதேச சட்ட மன்ற தேர்தலின் போது எடுக்கப்பட்டது என்பதையும் கள்ள ஓட்டுப் போட முயன்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதையும் அறிய முடிகிறது. இது தற்போதைய தேர்தலின் போது நடந்தது எனத் தவறாகப் பரப்புகின்றனர்.
முடிவு:
உத்தரப் பிரதேசத்தில் கள்ள ஓட்டுப் போட முயன்ற புர்கா அணிந்த பெண்கள் எனப் பரவக் கூடிய வீடியோ, 2022ம் ஆண்டு அம்மாநில சட்ட மன்ற தேர்தலின் போது எடுக்கப்பட்டது. அதனை தற்போது நடந்தது எனத் தவறாகப் பரப்புகின்றனர்.