அர்ஜுனா விருது பெற்ற வீரர் குல்ஃபி ஐஸ்கிரீம் விற்கிறாரா ?
பரவிய செய்தி
அர்ஜுனா விருது பெற்ற சர்வதேசக் குத்துச்சண்டை வீரர் தினேஷ் குமார் வறுமையின் காரணமாக குல்ஃபி ஐஸ்கிரீம் விற்று வருகிறார். 17 தங்கப்பதக்கம் வென்ற வீரரின் தற்போதைய அவலநிலை.
மதிப்பீடு
சுருக்கம்
இந்தியக் குத்துச்சண்டை வீரர் தினேஷ் குமார் அர்ஜுனா விருது பெற்றதாக ANI நியூஸ் சேனலில் முதலில் பதிவிட்டு, பின்னர் அதற்கு மறுப்பு தெரிவித்து மறுபதிவுச் செய்துள்ளனர். பல பதக்கம் வென்ற தினேஷ் குமார் வீதிகளில் ஐஸ்கிரீம் விற்பனை செய்து வருகிறார்.
விளக்கம்
இந்தியக் குத்துச்சண்டை வீரரான தினேஷ் குமார் ஹரியானா மாநிலத்தின் பிவானி தெருக்களில் குல்ஃபி ஐஸ்கிரீம் விற்பனை செய்து வருகிறார். தினேஷ் குமார் இந்தியா மற்றும் அயல் நாடுகளில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளில்கலந்து கொண்டு 17 தங்கப்பதக்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
தினேஷ் குமார் பற்றி செய்தி வெளியிட்ட நியூஸ் ஏஜென்சியான ANI, அர்ஜுனா விருது பெற்ற சர்வதேச குத்துச்சண்டை வீரர் தினேஷ் குமார் வறுமையின் காரணமாக பிவானியில் குல்ஃபி ஐஸ்கிரீம் விற்று வருகிறார். குத்துச்சண்டை போட்டிகளில் 17 தங்கப்பதக்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார் என அக்டோபர் 28-ம் தேதி பதிவிட்டு இருந்தனர்.
இந்த பதிவு வெளியாகிய சில மணி நேரத்தில் தினேஷ் குமார் அர்ஜுனா விருது பெறவில்லை, அவர் தேசிய அளவிலான குத்துச்சண்டை வீரர் என குறிப்பிட்டு பதிவிட்டனர். அர்ஜுனா விருது எனக் கூறியதை பலரும் உண்மை என நினைத்து கருத்து பதிவிடத் தொடங்கி இருப்பர்.
2014-ல் சமனா எனும் பகுதியில் நடைபெற்ற கார் விபத்தில் சிக்கிய தினேஷ் குமார் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை உருவாகியது. ஜூனியர் பிரிவில் பல போட்டிகளை வென்ற தினேஷ் குமாரை இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற போட்டிகளுக்கு கடன் உதவியின் மூலம் அனுப்பியுள்ளார் அவரது தந்தை. அக்கடனை திரும்ப செலுத்துவதற்கும், வாழ்வதற்கும் பணம் தேவை என்பதால் வேறு வழியின்றி ஐஸ்கிரீம் விற்பனை செய்து வருகிறார்.
அரசின் தரப்பிலோ, ஆட்சியாளர்கள், கட்சியினர் தரப்பிலோ, பிற அமைப்புகள் மூலம் எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை என ஆதங்கப்படுகிறார். இருப்பினும், தன்னிடம் குத்துச்சண்டை பயில வருபவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ANI குத்துச்சண்டை வீரர், உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விவகாரம், காஷ்மீரில் இறந்த ராணுவ வீரருக்கு பதில் மற்றொரு வீரரின் படத்தை தவறாக வெளியிட்டது என பல செய்திகளில் தவறான தகவல்களை வெளியிட்டு தவறு என சுட்டிக்காட்டி உள்ளது. அதில் ஒன்று,
உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் :
தேசிய பேரிடர் காலங்களில் பாதிப்புகளில் இருந்து ஹெலிகாப்டரில் மீட்கப்படும் மக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என ANI செய்தி வெளியிட்டது. அதனுடன் அரசின் அறிக்கை என ஒன்றை வெளியிட்டனர்.
ஆனால், மக்களை மீட்க கட்டணம் எதுவும் பெறப் போவதில்லை எனவும், பேரிடர்காக 2 ஹெலிகாப்டர்கள் நிறுவப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தார்உத்தரகாண்ட் முதல்வர். இது மிகப்பெரிய அளவில் விவாதமாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
அதைப் பற்றி முழுமையாக அறிய : இயற்கை பேரிடரில் ஹெலிகாப்டரில் காப்பாற்றப்பட்டால் கட்டணமா ?