2018ல் உடைந்த அரசு பேருந்து படிக்கட்டு படத்தை திமுக ஆட்சி எனப் பரப்பும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ !
பரவிய செய்தி
2022ம் ஆண்டின் சிறந்த புகைப்படம்.
மதிப்பீடு
விளக்கம்
2022ம் ஆண்டில் சிறந்த புகைப்படம் என அரசு பேருந்தின் படிக்கட்டு உடைந்து இருக்கும் புகைப்படம் ஒன்றினை சமூக வலைத்தளங்களில் அதிமுக-வை சேர்ந்த ராதாபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை முதற்கொண்டு, அதிமுகவினர் பலரும் இந்த சம்பவம் திமுக ஆட்சியில் நடந்ததாக பரப்பி வருகின்றனர்.
"Picture Of The Year 2022"#திமுகவால்_தலைகுனியும்_தமிழகம்#DMKFails#திராவிட_மாடல்* pic.twitter.com/yFB16T84k8
— LAKSHMINARAYANAN AIADMK (@LaksAiadmk) January 1, 2023
"Picture Of The Year 2022"#திமுகவால்_தலைகுனியும்_தமிழகம்#DMKFails#திராவிட_மாடல் @CMOTamilnadu pic.twitter.com/W2Ud49Acs6
— Thirumathi Saseekumar (@TSaseekumar) January 1, 2023
உண்மை என்ன ?
சமூக வலைத்தளங்களில் பரவக்கூடிய புகைப்படத்தைக் கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து தேடிய போது, 2018ம் ஆண்டு முதலே இந்த புகைப்படம் இணையத்தில் இருப்பதைக் காண முடிகிறது.
Tamil brahmins என்ற இணையதளத்தில் 2018, ஜனவரி 22ம் தேதி இப்புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. அப்பதிவில் ‘Tamil Nadu Govt.. increased the Bus Fair because NO MONEY to provide Even Foot -Board..’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே புகைப்படத்தினை குமுதம் பத்திரிக்கையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் 2018, ஜனவரி 25ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதில் “ஒண்ணுமில்ல.. படி எங்க இருக்குன்னு தேடுறாப்ல!” எனக் கிண்டல் செய்யும் விதமாக எழுதப்பட்டுள்ளது.
இதனைக் கொண்டு பார்க்கையில், இது 2018ம் ஆண்டு நடந்தது என்பதை அறிய முடிகிறது. அப்போது தமிழ்நாட்டினை அதிமுக ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.
திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2021 நவம்பர் மாதம் மயிலாடுதுறையிலிருந்து பொறையாறு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் படிக்கட்டு ஒன்று உடைந்துள்ளது. அந்நிகழ்வு குறித்து விகடன் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‘2021, நவம்பர் 23ம் தேதி மயிலாடுதுறையிலிருந்து பொறையாறு சென்று கொண்டிருந்த 27ஏ என்ற பேருந்தில் 106 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதிகமான பயணிகள் பயணம் செய்ததின் காரணமாகப் பேருந்துக்குள் நிற்க இடமில்லாததால், கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தின் படிக்கட்டில் நின்றபடி பயணித்துள்ளனர்.
இந்நிலையில் தரங்கம்பாடி சாலையில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோயில் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் பின் பக்க படிக்கட்டு உடைந்தது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், “தருமபுரி அருகே அரசு பேருந்தின் படிக்கட்டு உடைந்து சாலையில் விழுந்த மாணவர்கள்” என்ற தலைப்பில் மாலை மலர் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், பரப்பப்படும் புகைப்படம் திமுக ஆட்சியில் நிகழ்ந்தது இல்லை.
முடிவு :
நம் தேடலில், 2022ல் சிறந்த புகைப்படம் என அதிமுகவினர் பரப்பும் அரசு பேருந்தின் படிக்கட்டு உடைந்திருக்கும் புகைப்படமானது 2018ம் ஆண்டு முதலே சமூக வலைத்தளங்களில் பரவி இருக்கிறது. அப்போது ஆட்சியில் இருந்தது அதிமுக என்பதையும் காண முடிகிறது.