கனடாவில் உள்ள பகவத் கீதை பூங்காவின் பெயர்ப்பலகை சேதப்படுத்தப்பட்டதா ?
பரவிய செய்தி
“கனடா நாட்டில் ப்ராம்ப்டன் நகரில் உள்ள ஸ்ரீ பகவத் கீதை பூங்காவில் நடந்த வெறுப்பு குற்றத்தைக் கண்டிக்கிறோம். கனடா அதிகாரிகள் மற்றும் பீல்(Peel Police) போலீசார் குற்றம் நிகழ்த்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”- கனடாவில் உள்ள இந்தியத் தூதரகம்.
மதிப்பீடு
விளக்கம்
கனடா நாட்டின் ப்ராம்ப்டன் நகரில் உள்ள பகவத் கீதைப் பூங்காவின் பெயர் பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியும், அதைக் கண்டித்தும் சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கனடாவில் தொடர்ந்து இந்து வெறுப்பு குற்றங்கள் நடந்து வருவதாகவும் பதிவிட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கனடாவில் உள்ள இந்தியத் தூதரகம் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறது.
இதுகுறித்து டைம்ஸ் நவ்(Times Now), இந்தியா டுடே(India Today) போன்ற பல முன்னணி செய்தித்தளங்கள் கூட செய்தி வெளியிட்டுள்ளன.
உண்மை என்ன ?
கடந்த செப்டம்பர் 27ம் கனடாவின் ப்ராம்ப்டன்(Brampton) நகரில் உள்ள ட்ரொயேர்ஸ்(Troyers) என்ற பூங்காவின் பெயர் ஸ்ரீ பகவத் கீதை பூங்கா என்று பெயர் மாற்றம் செய்து திறந்து வைக்கப்பட்டது. இதனை ப்ராம்ப்டன் நகரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவாகி உள்ளது. மேலும், இந்தப் பெயர் மாற்றம் இந்து சமுதாய மக்கள் ப்ராம்ப்டன்(Brampton) நகருக்கு செய்த பங்களிப்புகளை நினைவூட்டும் விதமாக செய்யப்பட்டுள்ளது என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ பகவத் கீதை பூங்காவின் பெயர்ப்பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளது என பரவியச் செய்தி குறித்து இணையத்தில் தேடினோம். ப்ராம்ப்டன்(Brampton) நகரின் மேயர் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சர்ச்சைகள் குறித்து ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், ” பகவத் கீதை பூங்காவின் பெயர்ப்பலகை சேதப்படுத்தப்படவில்லை எனவும், பெயர்ப்பலகையில் ஒட்டப்படவேண்டிய ஸ்டிக்கர் சேதப்பட்டதால் அதனை மறுபடி ரிபிரிண்ட்(Reprint) செய்யும் வரை பெயரில்லா பலகை அங்கு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அதனை தான் சேதப்படுத்தப்பட்ட பெயர்ப்பலகை என சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அடுத்த நாள் காலையே புதிய ஸ்டிக்கர் அந்தப் பலகையில் ஒட்டப்பட்டது ” எனத் தெரிவித்து இருக்கிறார்.
From @CityBrampton Community Services and Communications Department on the confusion over resident complaints about Gita Park sign.
“We learned that the sign was damaged during the original install & a city staff member brought it back for unplanned maintenance & to reprint.” https://t.co/hkfmSFF1Ui
— Patrick Brown (@patrickbrownont) October 3, 2022
Update #3. The new park sign is now installed. pic.twitter.com/yS3CQcFl5N
— Patrick Brown (@patrickbrownont) October 3, 2022
பகவத் கீதை பூங்கா திறந்து வைக்கப்பட்ட நிகழ்வின் போது சஞ்சீவ் மாலிக் என்பவரின் முகநூல் பக்கத்தில் வெளியான நேரலை காட்சியில், ” இரண்டு பெயர்ப்பலகைகள் இருப்பதைக் காணலாம். புல் தரைப் பகுதியில் வைக்கப்பட்ட நிரந்தர பெயர்ப்பலகையை சேதப்படுத்தப்பட்ட பெயர்ப்பலகை எனத் தவறாகப் பரப்பி இருக்கிறார்கள்.
மேலும், இதுகுறித்து பீல் பகுதி போலீசார்(Peel Regional Police) ஒரு செய்தி வெளியிட்டுள்ளனர். அதில், அந்தப் பெயர்ப்பலகை சேதப்படுத்தப்பட்டதாக கூறும் தகவலுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும், சமூகவலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பது பெயர் பொறிக்கப்படுவதற்கு முன் இருந்த பலகை எனவும், பூங்காவின் பெயரிடும் விழாவிற்கு பயன்படுத்தப்படும் தற்காலிக பெயர்ப்பலகையை உன்மையான பெயர்ப்பலகை என வதந்தி பரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதிலிருந்து, கனடாவில் உள்ள ஸ்ரீ பகவத் கீதை பூங்காவின் பெயர்ப்பலகை சேதப்படுத்தப்பட்டது எனவும், கனடாவில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்து வருவதாக பரவும் செய்திப் பொய் என தெரியவருகிறது.
முடிவு :
நம் தேடலில், கனடா நாட்டில் ப்ராம்ப்டன் நகரில் உள்ள ஸ்ரீ பகவத் கீதை பூங்காவின் பெயர்ப்பலகை சேதப்படுத்தப்பட்டதாக கனடாவில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் முன்னணி செய்தி தளங்கள் வெளியிட்ட செய்தி உண்மையில்லை என அறிய முடிகிறது.