புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு | திருத்தப்பட்ட விலை தெரியுமா ?
பரவிய செய்தி
புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு.
மதிப்பீடு
சுருக்கம்
மே 2019-ல் 9 புற்றுநோய் மருந்துகளின் விலையை குறைத்து National Pharmaceutical Pricing Authority குறிப்பாணையை வெளியிட்டது. இதற்கு முன்பாக மார்ச் மாதத்தில் அட்டவணைப்படுத்தப்படாத 463 புற்றுநோய் மருந்துகளின் விலையை குறைத்து இருந்தனர்.
விளக்கம்
இன்றளவிலும் கொடிய நோயாக பார்க்கப்படுபவைகளில் புற்றுநோயும் ஒன்றாகும். அந்நோயின் சிகிச்சைக்கு, மருந்துகளுக்கு ஏற்படும் செலவுகள் அதிகம் என்பதால் முறையான சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். புற்றுநோய்க்கான ஒரு கிமோதெரபி இன்ஜெக்சன் ரூ.22,000 வரை செல்கிறது. இதனால் சாமானிய மக்கள் மட்டுமின்றி நடுத்தர மக்களால் கூட சிகிச்சை பெறுவதில் சிரமங்கள் இருக்கிறது.
மினிஸ்ட்ரி ஆஃப் கெமிக்கல் அன்ட் ஃபெர்டிலைசர்ஸ் கீழ் உள்ள National Pharmaceutical Pricing Authority ஆனது இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் விலைகளை பன்மடங்கு குறைத்து உள்ளது.
2019 மே 15-ம் தேதி National Pharmaceutical Pricing Authority வெளியிட்ட குறிப்பாணையில், ” பிராண்ட்களின் அடிப்படையில் 9 புற்றுநோய் மருந்துகளின் விலையானது குறைக்கப்பட்டு மருந்துகளின் திருத்தப்பட்ட விற்பனை விலை வெளியிடப்பட்டது”.
அதன்படி, pemxcel எனும் பிராண்ட் மூலம் நுரையீரல் புற்றுநோய்க்கு விற்பனை செய்யப்படும் இன்ஜெக்சன் pemetrexed(500mg) விலையானது 22,000-ல் இருந்து 2,880 ரூபாயாக விலை குறைக்கப்பட்டன. அதே பிராண்டின் pemetrexed(100mg) இன்ஜெக்சன் விலையானது 7,700-ல் இருந்து 800 ரூபாயாக விலை குறைக்கப்பட்டன. விலை குறைக்கப்பட்ட பிராண்டுகளின் மருந்துகளின் விலையை அட்டவணையில் காணலாம்.
இரண்டாம் முறையாக புற்றுநோய் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 2019 மார்ச் 11-ம் தேதி அட்டவணைப்படுத்தப்படாத 463 புற்றுநோய் மருந்துகளின் அதிகபட்ச விலையானது மாற்றியமைக்கப்பட்டு, குறைக்கப்பட்ட விலையானது வெளியிடப்பட்டது. விலை குறைக்கப்பட்ட 463 புற்றுநோய் மருந்துகளின் பட்டியலை NPPA வெளியிட்டு இருந்தது.
அரசின் எதிர்பார்ப்பின்படி, புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பால் இந்தியாவில் 22 லட்சம் புற்றுநோயாளிகள் பயன்பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும், நோயாளிகளுக்கு மருந்திற்கு உண்டாகும் செலவில் ரூ.800 கோடியை சேமிக்க முடியும் எனக் கூறுகின்றனர்.
தொடர்ச்சியாக குறிப்பிட்ட பிராண்டுகளின் புற்றுநோய் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டதற்கு நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மத்திய அரசின் அமைச்சகம் புற்றுநோய் மருந்துகளின் விலையை குறைத்தது பாராட்டப்பட வேண்டியது. உயிர் காக்கும் மருந்துகள் அனைத்தும் மக்களின் வசதிக்கே கிடைக்கும் வகையில் அரசாங்கம் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.