13 மொழிகளில் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு.. முதல் முறையாக கொண்டு வந்ததாக ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி !
பரவிய செய்தி
முதல் முறையாக மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படவுள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
மத்திய ஆயுதப்படை காவலர் (CAPF GD constable) தேர்வு, வருகின்ற பிப்ரவரி 20 அன்று தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை, நாட்டின் 128 நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வை 48 லட்சம் பேர் எழுத உள்ளனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்விற்கான நுழைவு சீட்டு மத்தியப்பகுதி, கிழக்குப் பகுதி, கர்நாடக கேரளப் பகுதி, மத்தியப் பிரதேசம், வடகிழக்கு பகுதி, வடக்குப் பகுதி, வடமேற்குப் பகுதி, தெற்குப் பகுதி மற்றும் மேற்குப் பகுதி என ஒவ்வொரு பகுதி வாரியாக அதற்கான பிரத்யேக இணையதளங்களில் வெளியிடப்படும். முதல் கட்டமாக வடமேற்குப் பகுதிக்கான தேர்வு நுழைவுச் சீட்டு பிப்ரவரி 7 அன்று வெளியிடப்பட்டது. மற்ற பகுதிகளுக்கும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
In a historic move, the Constable (GD) examination for recruitment in the CAPFs will be conducted in 13 regional languages besides Hindi and English, which 48 lakh candidates will take.
It is a decisive step towards realizing PM @narendramodi Ji’s vision to facilitate the…
— Amit Shah (@AmitShah) February 11, 2024
இந்நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சரான அமித்ஷா மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு எழுதுபவர்களுக்கு தனது வாழ்த்து செய்தியை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “ஒரு வரலாற்று நடவடிக்கையாக, CAPF களில் ஆட்சேர்ப்புக்கான கான்ஸ்டபிள் (GD) தேர்வு, இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படவுள்ளது, இதில் 48 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். இது நமது இளைஞர் படையின் திறன்களை அவர்களின் தாய் மொழிகளின் சக்தியுடன் எளிதாக்கும் பிரதமர் நரேந்திர மோடி ஜியின் தீர்க்கமான பார்வை. தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தி ஹிந்து, ஹிந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, மணிகண்ட்ரோல், ABP live தமிழ்நாடு மற்றும் டெக்கான் ஹெரால்ட் போன்ற ஊடகங்களும் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படவுள்ளது இதுவே முதல் முறை என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளனர்.
உண்மை என்ன ?
பொதுவாக மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் சி.ஏ.பி.எஃப் (Central Armed Police Forces), எஸ்.எஸ்.எஃப் மற்றும் என்ஐஏ ஆகியவற்றில் உள்ள கான்ஸ்டபிள் (GD) பதவிகளுக்கும், அசாம் ரைபிள்ஸ் இல் உள்ள ரைபிள்மேன் கான்ஸ்டபிள் (Rifleman (GD)) பதிவிகளுக்கும் கணினி அடிப்படையிலான போட்டித் தேர்வு இந்தியா முழுவதும் நடைபெறும். மேலும் இந்த தேர்வு i) கணினி அடிப்படையிலான தேர்வு (CBT), ii) உடல் திறன் தேர்வு (PET) அல்லது உடல் தரநிலை சோதனை (PST) மற்றும் iii) மருத்துவப் பரிசோதனை (MT) ஆகிய மூன்று நிலைகளில் நடைபெறும்.
எனவே முதல்முறையாக 2024-ல் தான் இந்தத் தேர்வு தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படவுள்ளது என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், இது குறித்த தற்போதைய (2024) அறிவிப்பை, அதிகாரப்பூர்வ ssc.nic.in இணையதளத்தில் ஆய்வு செய்து பார்த்தோம். அதில், 160 மதிப்பெண்களுக்காக நடத்தப்படும் இந்த தேர்வில் தலா 40 மதிப்பெண்களுக்கு A, B, C மற்றும் D என்ற நான்கு பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இதில் கடைசி பிரிவான D மட்டும் ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழிப்பாடங்களுக்கானது என்று குறிப்பிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
மேலும் அதில், “கணினி அடிப்படையிலான இந்தப் போட்டித் தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியைத் தவிர்த்து, தமிழ், அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி மற்றும் கொங்கனி உட்பட 13 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, கடந்த 2013 ல் மத்திய ஆயுதப்படை காவலர் (CAPF GD constable) தேர்வு ஆள்சேர்ப்புக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பையும் ஆய்வு செய்து பார்த்தோம். அப்போதே இந்த தேர்வு 13 பிராந்திய மொழிகளில், OMR sheet மூலம் எழுத்து முறையில் நடத்தப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ய முடிந்தது.
2015ம் ஆண்டிலும் இதே நடைமுறையே இருந்துள்ளது. 2016ல் எஸ்எஸ்சி எழுத்து தேர்வுகள் கணினி அடிப்படையிலான தேர்வாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, 2016 மற்றும் 2017ல் வந்த அறிவிப்புகளில், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே தேர்வுகள் நடைபெற்று வந்தன.
2018 முதல் 2023 வரை வெளியிடப்பட்ட தேர்வுக்கான அறிவிப்பிலும், இந்த தேர்வு ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடைபெறும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தேர்வுகள் மாநில மொழிகளில் நடைபெற வேண்டுமென பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து, தற்போது முன்பிருந்தபடியே பிராந்திய மொழிகளும் இணைக்கப்பட்டு உள்ளன.
பாஜக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் மத்திய ஆயுதப்படை காவலர் (CAPF GD constable) தேர்வு எழுத்து முறையில் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட்டு தான் வந்துள்ளது. 2016ல் கணினி முறை தேர்விற்கு மாறிய பிறகு தற்போது தான் 13 பிராந்திய மொழிகளில் மீண்டும் நடத்தப்பட உள்ளது.
இதன் உண்மை தன்மையை அறியாமல் தி ஹிந்து, ஹிந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இண்டியா, மணிகண்ட்ரோல், ABC live தமிழ்நாடு மற்றும் டெக்கான் ஹெரால்ட் போன்ற ஊடகங்கள், 2024-ல் தான் இத்தேர்வு 13 பிராந்திய மொழிகளில் முதன்முறையாக நடத்தப்படவுள்ளது என்று கூறி தவறாகச் செய்தி வெளியிட்டுள்ளனர்.
மேலும் படிக்க: 2024 ஒலிம்பிக்கில் விளையாட பவானி தேவி தகுதி பெற்றதாக ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி !
முடிவு:
நம் தேடலில், முதல்முறையாக 13 பிராந்திய மொழிகளில் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு நடத்தப்படுவதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி தவறானது என்பதை அறிய முடிகிறது.