சாதி பாகுபாடு காரணமாக இளைஞனை ஷுவில் தண்ணீர் அருந்த வைத்ததாகப் பரவும் தவறான வீடியோ!
பரவிய செய்தி
மோடியின் இந்தியாவின் அற்புதமான படம். மோடி காலத்தில் உயர் சாதியினரின் குழாய்த் தண்ணீரைக் குடித்ததற்காக தாழ்த்தப்பட்ட இந்துவை ஷூவில் இருந்து தண்ணீர் குடிக்க வைத்து தண்டிக்கும் நடைமுறையைப் பாருங்கள். நாட்டிலிருந்து பாகுபாட்டை அகற்ற முடியாத அரசு, பிற்படுத்தப்பட்ட சாதிகளை எப்படி வளர்க்கும்?
மதிப்பீடு
விளக்கம்
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் கூட இல்லாத நிலையில், அரசியல் தலைவர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சின் கீழ் மக்கள் சாதி பாகுபாட்டால் துன்புறுவதைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் அப்பதிவுகளில், “மோடியின் ஆட்சியில் உயர் சாதியினரின் குழாய்த் தண்ணீரைக் குடித்ததற்காக தாழ்த்தப்பட்ட இந்துவை ஷூவில் இருந்து தண்ணீர் குடிக்க வைத்து தண்டிக்கும் நடைமுறையைப் பாருங்கள். நாட்டிலிருந்து பாகுபாட்டை அகற்ற முடியாத அரசு, பிற்படுத்தப்பட்ட சாதிகளை எப்படி வளர்க்கும்?” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததைக் காண முடிகிறது.
மோடியின் இந்தியாவின் அற்புதமான படம்.
மோடி காலத்தில் உயர் சாதியினரின் குழாய்த் தண்ணீரைக் குடித்ததற்காக தாழ்த்தப்பட்ட இந்துவை ஷூவில் இருந்து தண்ணீர் குடிக்க வைத்து தண்டிக்கும் நடைமுறையைப் பாருங்கள்.
நாட்டிலிருந்து பாகுபாட்டை அகற்ற முடியாத அரசு, பிற்படுத்தப்பட்ட சாதிகளை pic.twitter.com/mdxaskIx3R— செங்கை.ப.தமிழ்வேந்தன் (@PThamizhventhan) April 8, 2024
The plight of the Dalit community in India continues to be a cause for concern, as incidents of caste-based discrimination and violence continue to occur with alarming frequency. pic.twitter.com/f08maHXhd1
— South Asian Human Rights Watch (@SAHR_Watch) April 4, 2023
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது கடந்த 2020 இல் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
Free Press Journal பக்கத்தில் கடந்த 2020 ஜூன் 16 அன்று பரவி வரும் இந்த வீடியோ குறித்து “ராஜஸ்தானில் காதலுக்காக இளைஞனை சிறுநீரை குடிக்க வைத்த பஞ்சாயத்து வீடியோ வைரலாகி வருகிறது” என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியிடப்ப்ட்டுள்ளதைக் காண முடிந்தது.
அதில், “இளைஞனை கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்து கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வந்த நிலையில், மற்றொரு வீடியோவில், அந்த இளைஞனை ஷூவில் இருந்து தண்ணீர் குடிக்கச் சொல்லி வலுக்கட்டாயமாக கேட்கிறார்கள். ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தின் பலடி தானா பகுதியின் சர்தார்புரா கிராமத்தில் தான் இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பையனுக்கும், அதே சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையேயான காதல் விவகாரம் சம்பந்தப்பட்ட விஷயம் இது. போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இருப்பினும், புகார்தாரர் முன்வருவதற்காக அவர்கள் காத்திருப்பதால், இதுவரை எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே போன்று, Times of India பக்கத்திலும் இது குறித்து “ராஜஸ்தான் இளைஞன் தனது சொந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் உறவுக்காக சிறுநீர் குடிக்க வைத்து துஷ்பிரயோகம் செய்யப்பட்டான்” என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “அந்த வைரலான வீடியோவில், இளைஞனை ஒரு கும்பல் சுற்றி வளைத்து, தாக்கி, காலணியில் இருந்து தண்ணீர் குடிக்க வைத்து, பின்னர், பாட்டிலில் இருந்த சிறுநீரை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளனர்.
அவரைச் சுற்றியுள்ளவர்கள் தொடர்ந்து அவரைத் திட்டுவதும், மது அருந்தலாம் என்றால் ஏன் சிறுநீர் குடிக்கக் கூடாது என்று கூறுவதையும் கேட்க முடிந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரும் தேவசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அப்பகுதியைச் சேர்ந்த பூரம் தஹியா என்பவர் தெரிவித்தார். தஹியா கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எனது பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், நான் அவர்களை தடுத்து நிறுத்தி, சுமேர்பூர் காவல்துறையிடம் ஒப்படைத்தேன், அங்கு மேல் விசாரணைக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, என்றும் அவர் கூறினார்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் பரவி வரும் வீடியோ, சாதி பாகுபாடு காரணமாக எடுக்கப்பட்டதல்ல என்பதை உறுதிபடுத்த முடிகிறது. ராஜஸ்தான் இளைஞன் ஒருவன் தனது சொந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததற்காகவே இவ்வாறு கொடுமைப்படுத்தப்பட்டுள்ளான் என்பது தெளிவாகிறது. நம் நாட்டில் சாதி பாகுபாடு காரணமாக இந்நாள் வரையிலும் பல்வேறு கொடுமைகள் தினமும் நடந்து கொண்டேதான் உள்ளது, ஆனால் இந்த வீடியோவில் காணப்படும் நிகழ்வு சாதி பாகுபாடு காரணமாக நடந்ததல்ல.
முடிவு:
நம் தேடலில், சாதி பாகுபாடு காரணமாக இளைஞனை ஷுவில் தண்ணீர் அருந்த வைத்ததாகப் பரவும் செய்தி தவறானது என்பதை அறிய முடிகிறது.