ஆன்லைனில் மாடு விற்று ஆண்டுக்கு ரூ.500 கோடி வருமானம் ஈட்டுவதாகப் பசுமை விகடன் வெளியிட்ட தவறான தகவல் !
பரவிய செய்தி
ஆன்லைனில் மாடுகளை விற்று இரண்டு ஐ.ஐ.டி.பட்டதாரி பெண்கள் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
மதிப்பீடு
விளக்கம்
ஐ.ஐ.டி பட்டதாரி பெண்கள் இரண்டு பேர் ஆன்லைன் மூலம் மாடுகளை விற்று ஆண்டுக்கு 500 கோடி வருவாய் ஈட்டியதாக ‘பசுமை விகடன்’ டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
ஆன்லைனில் மாடுகளை விற்று இரண்டு ஐ.ஐ.டி.பட்டதாரி பெண்கள் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகின்றனர்.https://t.co/ZICdUHIMmH#Agriculture #Farming #Women #Online
— பசுமை விகடன் (@PasumaiVikatan) November 21, 2023
அக்கட்டுரையின் தலைப்பில் ‘3 ஆண்டுகளில் 5 லட்சம் மாடுகள் விற்பனை; ஆன்லைனில் ரூ.500 கோடி சம்பாதித்த ஐ.ஐ.டி பெண்கள்!’ எனக் கூறப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
ஆன்லைன் மூலம் மாடு விற்பதில் மூன்று ஆண்டுகளில் 500 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியுமா என்கிற கேள்வியின் அடிப்படையில், ‘Animall’ என்ற அந்நிறுவனம் குறித்து இணையத்தில் ஆய்வு மேற்கொண்டோம்.
‘Animall’ என்கிற பெயரில் ஆன்லைன் மூலம் மாடுகளை வாங்க விற்க ஏதுவாக ஒரு நிறுவனத்தை நீது மற்றும் கீர்த்தி என்கிற ஐ.ஐ.டி. பட்டதாரி பெண்கள் தொடங்கியுள்ளனர். 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் செல்போன் செயலி (App) மூலம் இச்சேவையை இந்தி மொழியில் செயல்படும் வகையில் தொடங்கியுள்ளது.
அந்நிறுவனம் 2022ம் நிதியாண்டில் ரூ.7.4 கோடி சம்பாதிக்க ரூ.55 கோடி செலவிட்டதாக ‘En trackr’ என்னும் தளத்தில் 2023, ஏப்ரல் 4ம் தேதி வெளியான கட்டுரை கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரு ரூபாய் வருவாய் ஈட்ட ரூ.7.4 செலவிட்டிருக்கின்றனர்.
2021ம் ஆண்டு 0.05 கோடியாக இருந்த அந்நிறுவனத்தின் Operating Revenue 2022ம் ஆண்டு ரூ.7.4 கோடியாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், 2021ம் ஆண்டு ரூ.12.96 கோடியாக இருந்த மொத்த செலவானது (Total Expenses) அடுத்த ஆண்டான 2022ல் ரூ.55.54 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், அந்நிறுவனத்தின் நட்டமானது ரூ.12.64 கோடியில் இருந்து ரூ.44.2 கோடியாக அதிகரித்துள்ளது என அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்நிறுவனம் பங்குகள் மூலம் நிதி திரட்டியது, தொழிலை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த பெறப்படும் ‘Series B’ நிதியைப் பெற்றது போன்ற தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்நிறுவனத்தின் மொத்த மதிப்பீடு (valued at around) ரூ.565 கோடி (75 மில்லியன் டாலர்) என்றும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மொத்த மதிப்பீடு என்பது அதன் வருவாய் ஆகாது.
Animall நிறுவனத்தின் இணையதளத்தில் அவர்களது வருவாய் குறித்து 2020ம் ஆண்டு வரையிலான ஆவணம் மட்டுமே உள்ளது. அதன் பிறகு வருவாய் பற்றி எதுவும் அவர்களது தளத்தில் இல்லை.
இந்நிறுவனம் குறித்து பசுமை விகடன் வெளியிட்ட கட்டுரையில் அவர்கள் ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாய் ஈட்டியதாகத் தவறாகக் குறிப்பிட்டுள்ளனர். அந்நிறுவனத்தின் மொத்த மதிப்பீடுதான் சுமார் 500 கோடி.
முடிவு :
ஆன்லைனில் மாடுகளை விற்று இரண்டு ஐ.ஐ.டி பட்டதாரி பெண்கள் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருவதாகப் பசுமை விகடன் வெளியிட்ட கட்டுரையில் உள்ள தகவல் தவறானது. அந்நிறுவனத்திற்கு 2022ம் நிதியாண்டில் சுமார் ரூ.44 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் மொத்த மதிப்பீடுதான் சுமார் 500 ரூபாய் கோடியாகும்.