ஹேக் செய்யப்பட்டதா ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா யூடியூப் பக்கம்?

பரவிய செய்தி
உங்கள் அனைவரின் வாழ்த்துகளால் நாங்கள் மென்மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கு ஆதாரம் சாணக்யா யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பது. யுடியூப் நிறுவனத்துக்கு இதை தெரிவித்துள்ளோம். chanakyaa.in , மற்றும் எங்களின் பேஸ்புக் , ட்விட்டர் பக்கங்கள் வழக்கம்போல் செயல்படும். கடவுளின் அருளால், எங்கள் பணியை தொடர்ந்து செய்வோம்.
மதிப்பீடு
சுருக்கம்
ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும், அதனை மீட்டெடுக்க யூடியூப் நிறுவனத்தை அணுகியுள்ளோம் என தனது ட்விட்டர் பக்கத்தில் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
விளக்கம்
உண்மை என்ன?
தனது சாணக்யா யூடியூப் பக்கம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்பதாக ரங்கராஜ் பாண்டே தெரிவித்துளார். ஆனால் ஒரு யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுவிட்டால் அதனுடைய மொத்த கட்டுப்பாடுகளும் அந்த குறிப்பிட்ட ஹேக்கர் கைகளில் இருக்கும். ஹேக்கர் அந்த பக்கத்தை நீக்கினால் , “This Channel does not exist” என்று யூடியூப் பக்கம் தெரிவிக்கும்.
Sample link of a YouTube Channel deleted by its owner
யூடியூப் பக்கத்தை அதன் உரிமையாளரே நீக்கும்பட்சத்தில் யூடியூப் இவ்வாறு தெரிவிக்கும்:
ஒரு குறிப்பிட்ட காணொளிகள் நீக்கப்பட்டால் , “This content is not available” என்று யூடியூப் பக்கம் தெரிவிக்கும். ஆனால் இங்கே ரங்கராஜ் பாண்டே அவர்களின் சாணக்யா யூடியூப் பக்கத்தை சொடுக்கினால் , ” This account has been terminated for violating YouTube’s Community Guidelines” என்று யூடியூப் தெரிவிக்கிறது.
சாணக்யா யூடியூப் பக்கத்தை சொடுக்கினால் யூடியூப் இவ்வாறு தெரிவிக்கிறது:
அதாவது, யூடியூப் நிறுவனத்தின் விதிகளை மீறியதால் இந்த பக்கம் நீக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யூடியூப் நிறுவனத்தின் விதிகளை மீறியதால் யூடியூப் நிறுவனமே ரங்கராஜ் பாண்டே அவர்களின் சாணக்யா யூடியூப் பக்கத்தை நிரந்தரமாக நீக்கியுள்ளது. என்ன காரணத்தால் நீக்கப்பட்டது என்பது அந்த பக்கத்தின் உரிமையாளருக்கு யூடியூப் நிறுவனம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும்.
ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டு அதில் ஹேக் செய்தவர் யூடியூப் விதிகளுக்கு மீறி ஏதாவது பதிவு செய்திருக்கும்பட்சத்தில் யூடியூப் அந்த பக்கத்தை முடக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஹேக் செய்யப்பட்ட பின் காணொளி ஏதாவது பதிவேற்றியிருந்தால் அது பொதுமக்களின் பார்வைக்கு தெரிய வந்திருக்கும். ஆனால் அப்படி ஹேக் செய்யப்பட்டு காணொளி எதுவும் பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. சாணக்யா ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று சொல்ல எந்தவிதமான முகாந்திரங்களும் இல்லை என்றே தற்போது வரை தெரிகிறது. இதுதொடர்பாக ரங்கராஜ் பாண்டே அவர்களை தொடர்புகொள்ள முயற்சித்தோம். ஆனால் அவர் அழைப்பை எடுக்கவில்லை. சாணக்யாவின் யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக அவர்கள் ஆதாரம் வழங்கினால் அதையும் வெளியிடுவோம்.
முடிவு:
ரங்கராஜ் பாண்டே அவர்களின் ‘சாணக்யா’ யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை. அந்த சாணக்யா யூடியூப் பக்கம், யூடியூப் நிறுவனத்தின் விதியை மீறியுள்ளதால் , யூடியூப் நிறுவனமே அந்த பக்கத்தை நிரந்தரமாக நீக்கியுள்ளது என்பது தெளிவாகிறது. தனது சாணக்யா பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக ரங்கராஜ் பாண்டே அவர்கள் தெரிவித்திருப்பது தவறான தகவல்.
Update
ரங்கராஜ் பாண்டே அவர்களின் சாணக்யா யூடியூப் பக்கம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததையடுத்து, “Hacking நடந்த 24 மணி நேரத்தில். திரும்ப வந்துவிட்டோம். இறைவன் கருணை, உங்களின் அன்பு இதை சாத்தியமாக்கியது. இன்னும் பொலிவோடு, இன்னும் வேகமாக, இன்னும் உண்மையாக உழைப்போம்” என்று ரங்கராஜ் பாண்டே அவர்கள் ட்வீட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் இட்டுள்ளார்.