சந்திரயான்-3 எடுத்த நிலவு, செவ்வாய் கிரக புகைப்படம் பஞ்சாங்கத்துடன் ஒத்துப் போவதாகப் பரவும் வதந்தி !

பரவிய செய்தி

எந்த வித அறிவியல் உபகரணமும் இன்றி எப்படி இவ்வளவு துல்லியமாக இந்து மதம் கணித்துள்ளது.. இந்துக்களுக்கு கிரகங்களின் சஞ்சாரங்களை பார்க்கவும் கணிக்கவும் இன்றைய அறிவியல் தேவையில்லை. சந்திரயான் இன்று அதிகாலை எடுத்த படம் இது, ஆச்சர்யம் என்னவென்றால், சந்திரனுக்கு அருகில் சிகப்பாக இருக்கும் (பந்து போல) கிரஹம்தான் செவ்வாய், இதிலென்ன ஆச்சர்யம் என நினைக்கலாம் நேற்றைய கோச்சாரத்தில் (நிகழம் கிரஹச்சாரத்க்கட்டத்தில்) சந்திரனும், செவ்வாயும் ஒன்றாக உள்ளது.

Twitter link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால்(ISRO) சந்திரயான் 3 விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

Archive link

இந்நிலையில், நிலவிலிருந்து சந்திரயான் எடுத்த புகைப்படத்தில் நிலவின் அருகே செவ்வாய் கிரகமும் தெரிகிறது, இதுகுறித்து பஞ்சாங்கத்தில் முன்பே கூறப்பட்டு இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் இப்புகைப்படம் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

சந்திரயான்-3 எடுத்த படம் எனப் பரவும் புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில் அது 2020ம் ஆண்டு முதலே இணையதளங்களில் இருப்பதைக் காண முடிந்தது.

நேற்றைய தினம் நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கியதைத் தொடர்ந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஏதேனும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தோம். அப்பக்கத்தில் நேற்றைய தினம் (ஆகஸ்ட், 23) சந்திரயான்-3 தரையிறங்கிய பிறகு எடுக்கப்பட்டது எனப் புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.

Twitter link

மேலும் இதற்கு முன்னதாக சந்திரயான்-3 நிலவுக்கு அருகில் சுற்றிக்கொண்டு இருக்கும் போது எடுக்கப்பட்ட சில படங்களையும் பதிவிட்டுள்ளனர். அவற்றில் எதிலும் பரவக் கூடிய படம் இல்லை.

மேற்கொண்டு இது குறித்துத் தேடியதில் ‘Space 8K Hydra’ என்ற டிவிட்டர் பக்கத்தில் 2023, மார்ச் மாதமும்; ‘Physics Nowஎன்ற பேஸ்புக் பக்கத்தில் 2021, பிப்ரவரி மாதமும் வைரல் செய்யப்படும் படம் பதிவிடப்பட்டுள்ளதைக் காண முடிந்தது. 

இதற்கும் முன்னதாக 2020, ஆகஸ்ட் 15ம் தேதி ‘NASA Science’ என்ற தளத்தில்Mars at the Moon’s Edge’ என்ற தலைப்பில் அப்படம் வேறு கோணத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ‘கடந்த ஞாயிற்றுக்கிழமை (2020, ஆகஸ்ட் 9ம் தேதி)’ எடுக்கப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து பரவக் கூடிய படத்துக்கும் சந்திரயான்-3 விண்கலத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை உறுதி செய்ய முடிகிறது. 

மேலும் படிக்க : சந்திரயான்-3 அனுப்பிய நிலவின் மேற்பரப்பு காட்சிகள் எனப் பரவும் 3D அனிமேஷன் வீடியோ !

இதே போல் சந்திரயானுடன் தொடர்புப்படுத்திப் பரப்பப்பட்ட போலி செய்திகளின் பற்றிய உண்மைகளை யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.

மேலும் படிக்க : சந்திரயான்-3 திட்டத்திற்காகப் பிரதமர் மோடி விரதம் இருப்பதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

முடிவு : 

நம் தேடலில், சந்திரயான்-3 எடுத்த படம் என சமூக வலைத்தளங்களில் பரவும் நிலவு மற்றும் செவ்வாயின் படம் தற்போது சந்திரயான்-3ன் மூலம் எடுக்கப்பட்டது அல்ல. அது 2020ம் ஆண்டு எடுக்கப்பட்டது என நாசாவின் இணையதளத்தில் பதிவாகி இருக்கிறது. அப்படத்தை பஞ்சாகத்துடன் தொடர்புப்படுத்தி தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader