வெள்ள நிவாரணத்தில் உதவித்தொகை கேட்ட சீமான் எனப் பரவும் போலி நியூஸ் கார்டு !
பரவிய செய்தி
நிவாரணத்தொகை – சீமான் வேண்டுகோள்; தமிழ்நாடு அரசு வழங்கும் வெள்ள நிவாரணத் தொகையை பெறும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் அத்தொகையை நம் கட்சியின் திரள் நிதிக்கு அனுப்ப வேண்டும் என சீமான் வேண்டுகோள் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி
மதிப்பீடு
விளக்கம்
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரண தொகை வழங்கும் பணி முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், “தமிழ்நாடு அரசு வழங்கும் வெள்ள நிவாரணத் தொகையை பெறும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் அத்தொகையை நம் கட்சியின் திரள் நிதிக்கு அனுப்ப வேண்டும்” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாகக் கூறி புதியதலைமுறையின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மக்களுக்கு நிவாரண தொகை எதுக்குனு கேட்டுட்டு இப்போ அதையே திரள் நிதியா கொடுங்கனு கேட்கிறான் மானங்கெட்ட பய… pic.twitter.com/vTqfneXLEK
— ஜெயசந்திரன் திமுக ♥️ (@jaya2016maha) December 18, 2023
பிச்சை போடுங்க உறவே @Seeman4TN pic.twitter.com/ESIWebbSoc
— சங்கர் கிருஷ்ணன் (@krish_itz) December 18, 2023
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து சீமான் ஏதாவது அறிக்கை அளித்துள்ளாரா என்பது குறித்து அவரது சமூக ஊடக பக்கங்களில் தேடியதில், வெள்ள நிவாரணத் தொகையை நாம் தமிழர் கட்சிக்கு வழங்குவது குறித்து அவர் எதுவும் கூறவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் புதிய தலைமுறையின் சமூக ஊடகப் பக்கங்களில், பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து தேடியதில், இன்று (டிசம்பர் 18), முற்பகல் 11:10 மணியளவில் “நிவாரணத்தொகை – சீமான் வேண்டுகோள்” என்ற தலைப்பில் அவர்கள் எந்த நியூஸ் கார்டும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் புதிய தலைமுறையில் தற்போது புதிய வடிவமைப்பில் நியூஸ் கார்டு வெளியிட்டு வருகின்றனர். ஆனால் பரவி வரும் நியூஸ் கார்டு பழைய வடிவமைப்பில் உள்ள நியூஸ் கார்டை போன்று இன்றைய தேதி (டிசம்பர் 18) குறிப்பிடப்பட்டு எடிட் செய்யப்பட்டு பரப்பப்படுகிறது.
மேலும் படிக்க: ஸ்ரீரங்கம் கோயில் பணியாளரை தாக்கியது ஆந்திர பாஜகவினரே எனப் பரவும் போலி நியூஸ் கார்டு !
முடிவு:
நம் தேடலில், “நிவாரணத்தொகை – சீமான் வேண்டுகோள்” என்ற தலைப்பில் பரவி வரும் புதிய தலைமுறையின் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.