This article is from Nov 19, 2020

சிதம்பரம் கோவிலில் நடராஜர் சிலையின் மீது மட்டும் மழை பெய்ததா ?

பரவிய செய்தி

நடராஜர் கோயிலில் அதிசய நிகழ்வு – சிலையில் மழை பெய்யும் காட்சி

Facebook link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

சிதம்பரம் கோவிலில் அமைந்துள்ள நடராஜர் சிலை மீது மட்டும் மழை பெய்யும் அதிசயம் நிகழ்ந்ததாக 36 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவிலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதாக தமிழ் செய்தி ஊடகங்களும் செய்தியாகவே வெளியிட்டு இருக்கின்றனர்.

சிலையின் மீது மழை பெய்யும் காட்சியை அதிசய நிகழ்வு எனக் கூறி சமூக வலைதளத்தில் ஆயிரக்கணக்கில் வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள். இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பில் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ? 
சிதம்பரம் கோவிலில் நடராஜர் சிலை மீது மட்டும் மழை பெய்ததாக இப்படியொரு வீடியோ வைரலான உடன் யூடர்ன் ஃபாலோயர் ஒருவர் அங்கு நேரில் சென்று வீடியோ எடுத்ததாக நமக்கு ஓர் வீடியோ அனுப்பி இருந்தார். அந்த வீடியோவில், சிலை அமைந்து இருக்கும் மண்டப பகுதிக்கு முன்பாக மற்றும் அதைச் சுற்றி மழை பெய்வதை காண முடிந்தது.
நடராஜர் சிலைக்கு அமைக்கப்பட்டு இருக்கும் விளக்கின் கோணத்தின் காரணமாக மழை பெய்வது தனியாக தெரிந்து இருக்கலாம் என நமக்கு தோன்றியது. நமக்கு கிடைத்த வீடியோவிலும் சிலை மீது மழை பொழிவது தனியாக தெரிகிறது. ஃபாலோயர் நமக்கு அனுப்பிய வீடியோ போன்று சிலர் சிலை அமைந்து இருக்கும் மண்டப பகுதியை சுற்றி மழை பெய்யும் வீடியோவை எடுத்து சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கினர்.
ஆனால், வைரலான வீடியோவை பதிவிட்ட  சிதம்பரம் மீம்ஸ் எனும் முகநூல் பக்கத்தில், மண்டப பகுதியை முழுமையாக எடுத்து பகிரப்பட்ட வீடியோ போலியானது என மீம்ஸ் பதிவிட்டு இருக்கிறார்கள்.
வைரான வீடியோவில் மண்டபத்திற்கு பின்பாக கோவிலின் கோபுரம் தெரிகிறது, ஆனால் இந்த வீடியோவில் அப்படி இல்லை எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவர்கள் கூறுவது போன்று அது போலியான வீடியோவோ அல்லது வேறு பகுதியோ அல்ல. ஒரே பகுதி வேறு கோணத்தில் எடுக்கப்பட்டு இருக்கிறது என வீடியோவை பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.
மேலும், சிலையின் மீது மட்டும் மழை பெய்வதாக வைரல் செய்யப்படும் வீடியோவில் அருகே சிறிது தூரத்தில் அமைந்து இருக்கும் மற்றொரு சிலையின் மீது மழை பெய்யவில்லை எனக் கூறுகிறார்கள். ஆனால், 36 நொடிகள் கொண்ட வீடியோவில் 14வது நொடியில் அருகே இருக்கும் சிலையின் மீது மழை சாரல்கள் விழுவது வெளிச்சத்தில் தெரிவதை வீடியோவை உன்னிப்பாக கவனிக்கையில் பார்க்கலாம்.
வைரலான வீடியோவில் நடுவில் இருக்கும் சிலையின் மீது அமைக்கப்பட்டு இருக்கும் விளக்கின் கோணமும், மழை பொழியும் திசையும் மழை பொழிவதை தனியாக காண்பித்து இருக்கிறது. அதேபோல், வீடியோ எடுத்தவர்கள் சிலையை மட்டும் ஜூம் செய்து இருக்கிறார்கள். அப்பகுதியை சுற்றி காண்பிக்கவில்லை.
முடிவு :  
நமது தேடலில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் மண்டபத்தில் உள்ள நடராஜர் சிலையின் மீது மழை பொழியும் அதிசய நிகழ்வு என பரவும் வீடியோ தவறானது. அப்பகுதியை சுற்றி மழை பொழிகிறது என்பதையும், சிலையின் இருக்கும் விளக்கின் கோணத்தினால் மழை பொழிவது தனியாக தெரிகிறது எனப் புரிந்து கொள்ள முடிகிறது.
Please complete the required fields.




Back to top button
loader