நம் தேசத்தில் நிகழ்ந்ததாக பரப்பும் பாகிஸ்தான் நாட்டின் வீடியோ !
பரவிய செய்தி
நெஞ்சம் பதறுகிறது. நாம் எப்படிப் பட்டவர்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இறைவா என் தேசத்தை காப்பாற்று. நடு நிலை பேசும் நண்பர்கள் இசுலாமிய நண்பர்கள் இது போன்ற சம்பவங்களை கண்டிகாதது வருத்தம் அளிக்கிறது. திருந்துங்கள் திருத்துங்கள்… இல்லை எனின் பொதுஜன விரோதிகள் ஆவீர்கள்…
மதிப்பீடு
சுருக்கம்
எது தவறு – இது இந்தியாவில் நடந்ததாக கூறுவது. இந்தியாவைச் சேர்ந்தது அல்ல.
எது சரி – இந்த சம்பவம் பாகிஸ்தான் நாட்டில் நிகழ்ந்து உள்ளது. அந்த நபரை கைதும் செய்துள்ளனர்.
விளக்கம்
சிசிடிவி காட்சியில் தெருவில் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர் அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் பெண் குழந்தைகளை அழைத்து எச்சில் தொட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்துவது உள்ளிட்ட காட்சிகள் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ நெஞ்சைப் பதற வைப்பதாகவும், நம் தேசத்தை காக்க வேண்டும் எனக் கூறி இவ்வீடியோ இந்திய அளவில் வைரலாகி வருகிறது.
குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நபரின் வீடியோ இந்திய அளவில் பரப்பப்படுவதோடு மதம் சார்ந்த கருத்துக்களுடன் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்ளும் நபரின் சிசிடிவி காட்சிகள் குறித்து செய்திகளில் வெளியாகவில்லை.
இச்சம்பவம் எங்கு நிகழ்ந்து இருக்கும் எனத் தேடுகையில், சிசிடிவி காட்சிகளில் நிகழ்ந்தது இந்தியா இல்லை, பாகிஸ்தான் நாட்டினைச் சேர்ந்தது என அறிய முடிந்தது. ஏப்ரல் 21-ம் தேதி பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண போலீஸ் ட்விட்டர் பக்கத்தில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து உள்ளதாகவும், குற்றவாளியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் டிஜி கான் நகரில் பெண் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்டவனின் சிசிடிவி வீடியோ காட்சி வைரலாகிய பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, அந்த நபரை கைது செய்து சிறையில் இருக்கும் புகைப்படத்தை பாகிஸ்தானின் பஞ்சாப் போலீஸ் வெளியிட்டு உள்ளது.