குழந்தைகளின் உடல் உறுப்பை திருடும் கும்பல் ஆந்திராவில் கைதா ?| | உண்மை என்ன ?
பரவிய செய்தி
இவர்கள் யார் தெரியுமா ?
பச்சிளம் குழந்தைகளைக் கடத்தி அவர்கள் கண்முன்னேயே அந்த குழந்தைகளின் உடல் உள் உறுப்புக்களை வெட்டி எடுத்து விலைக்கு விற்பவர்கள். ஆந்திராவில் பிடிபட்டவர்கள்
தோலில் மாட்டிய பள்ளிக்கூடத்து பைகூட கழட்டப்படவில்லை. ஆனால் வயிற்றுக்குள் ஒழிந்திருக்கும் பாகங்கள் கழட்டப்பட்டு விட்ட நிலையில் கழுத்தறுபட்டு கண்திறந்து இறந்துகிடக்கிறது அந்த பச்சிளம் குழந்தை. ஒரு பெண் மற்றொரு குழந்தையின் கையையும் வாயையும் இறுகப்பிடித்தபடி மற்றொருவன் குழந்தையின் வயிற்றின் ஓரத்தை அழுத்தி வெட்டிக்கொண்டிருக்கும் காட்சி. அதனருகில் இரண்டு பாலகர்கள் கட்டுண்ட நிலையில் அறுபட காத்திருக்கின்றனர்.
எவ்வளவு படித்தென்ன?? பணத்தாசையில் குழந்தையின் கொஞ்சும் மொழிகூட பணமாக தெரிகிறதே!! பெற்றெடுக்க தவமிருந்து பெறும்போது மறுபிறவி எடுத்தவர்கள் பிள்ளைகளை வளர்க்கும்போது கண்ணும் கருத்துமாய் கவணம் காக்க வேண்டாமோ என் சக பெற்றோரே !
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் குழந்தை கடத்தல் கும்பல்கள், வடநாட்டு கொள்ளை கும்பல்கள், உடல் உறுப்புகளை திருடும் கும்பல்கள் என மக்களிடையே அச்சத்தை உருவாக்கும் பதிவுகள் கடந்த காலங்களில் இருந்து அதிகரித்து வருவதை கண்டு இருப்பீர்கள் .
இவ்வாறு தொடர்ச்சியாக பதிவிடப்படும் பதிவுகளில் வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட வெவ்வேறு சம்பவங்களின் புகைப்படங்களை வைத்து ஓர் கதையை உருவாக்குவார்கள். அதை உண்மை என நினைத்து மக்களும் தங்களின் கோபங்களை கமெண்ட்களில் வெளிப்படுத்தி விடுவார்கள்.
அக்டோபர் 5-ம் தேதி கேதீஷ் என் உயிர் தோழா என்ற முகநூல் கணக்கில் பச்சிளம் குழந்தைகளை கடத்தி அவர்களின் கண்முன்னே உடல் உறுப்புகளை திருடும் கும்பலை ஆந்திராவில் கைது செய்துள்ளதாக பதிவிட்டு இருந்தனர். இந்த பதிவு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது.
இதையடுத்து , பிற முகநூல் பக்கங்கள், குழுக்கள் , தனிநபர் கணக்குகள் என பலவற்றில் இப்பதிவு பகிரப்பட்டு வைரலாகிக் கொண்டிருக்கிறது. குழந்தைகளின் உடல் உறுப்புகள் கடத்தல் குறித்த இந்த வைரல் செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய தீர்மானித்து இருந்தோம்.
முதல் மூன்று புகைப்படங்கள் :
வொய்லெட் நிற உடையில் சிறை கைதிகள் போல இருக்கும் மூவரின் புகைப்படங்கள் முதலில் இடம்பெற்று இருக்கிறது. அந்த புகைப்படத்தில் இருப்பவர்களை குறித்து ஆராய்ந்தோம்.
அதில், அவர்கள் அணிந்து இருக்கும் உடை ஆனது மலேசியா நாட்டின் சிறை கைதிகளின் உடையை போன்று இருக்கிறது . 2015-ல் cilisos.my என்ற இணையதளத்தில் மலேசியன் போலீஸ் கைது செய்தவர்கள் சிறை உடையில் இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்று இருக்கின்றன. தற்பொழுது பரவும் புகைப்படத்தில் இருப்பவர்களும் அந்த நிறத்தில் இருக்கும் உடையையே அணிந்து இருக்கிறார்கள்.
குழந்தையின் உடல் உறுப்பை எடுக்கும் புகைப்படங்கள் :
இந்த பதிவில் மிக முக்கியமான புகைப்படம் என்னவென்றால் , ஒரு பெண் குழந்தையை பிடித்துக் கொள்ள மற்றொருவர் குழந்தையின் உடல் உறுப்பை எடுப்பது போன்று இடம்பெற்று இருக்கும். அதனுடன் யூட்யூப் வீடியோவின் ஸ்க்ரீன்ஷார்ட் புகைப்படம் ஒன்றும் இடம்பெற்று இருக்கிறது. உண்மையில், உடல் உறுப்புகளை திருடுபவர்கள் புகைப்படமோ , வீடியோக்களோ எடுப்பார்களா என்ன ?
அத்தகைய புகைப்படங்கள் குறித்து தேடிய பொழுது, funny video online தளத்தில் வெளியான யூட்யூப் வீடியோ ஒன்றின் thumbnail-ல் வைரலான பதிவில் இருக்கும் புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது. போஜ்புரி நகைச்சுவை வீடியோக்களில் இப்புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளன.
வட இந்தியாவில் சில மாநிலங்களில் சாமியார் வேடத்தில் குழந்தை கடத்தல்கள் , உறுப்பு திருட்டு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நகைச்சுவை வீடியோக்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் ஒன்றின் புகைப்படமே அது.
காவலர்கள் ஒருவரை கைது செய்து அழைத்து செல்வது போன்ற இப்படத்தில் சுவரில் ” இந்தி ” மொழியில் எழுதப்பட்டு உள்ளது. புகைப்படத்தில் இருப்பவர்கள் வடஇந்தியாவைச் சேர்ந்தவர்கள் போன்றே தெரிகிறது .
ஆனால், பரவும் செய்திகளில் ஆந்திரா எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். சில புகைப்படங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. ஒவ்வொரு புகைப்படமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத புகைப்படங்கள் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.
” ஆந்திராவில் கைது செய்யப்பட்டு உள்ளதாக வைரல் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் , ஆந்திராவில் அவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்ததாகவோ அல்லது பிடிபட்டவர்களின் புகைப்படங்கள் குறித்து செய்திகளிலும் வெளியாகவில்லை “.
முடிவு :
நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், குழந்தைகளை கடத்தி உடல் உறுப்புகளை திருடும் கும்பல் ஆந்திராவில் கைது என வைரலாகும் பதிவும் முற்றிலும் தவறான பதிவு. அதில் இடம்பெற்று இருக்கும் புகைப்படங்கள் தொடர்பில்லாதவை என நம் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குழந்தை கடத்தல் கும்பல் என உலாவும் வதந்திகளின் விளைவால் இந்தியாவில் ஏதாவதொரு இடத்தில் அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .