அடைமழையிலும் தேசிய கீதம் பாடிய குழந்தைகள் | மனதை நெகிழ வைத்த செயல்.
பரவிய செய்தி
அடைமழையிலும் விடாமல் தங்களது தேசியகீதம் பாடலை முழுமையாக பாடிமுடித்து சுதந்திரத்தினத்தை கொண்டாடிய பள்ளிமாணவர்கள். இடம் : கர்நாடகா , மங்களூரு
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவின் 73-வது சுதந்திர தின கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது. சமூக வலைதளவாசிகள் தேசம் சார்ந்த பாடல்கள், பதிவுகளை பதிவிட்டு மகிழ்ந்தனர். மேலும், அன்று நாட்டில் நிகழ்ந்த நிகழ்வுகளையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.
அதில், கொட்டும் மழையிலும் பள்ளி மாணவர்கள் நகராமல் நின்ற இடத்திலேயே தேசிய கீதம் பாடிய வீடியோ தொடர்ந்து வைரலாகிக் கொண்டே இருக்கிறது. பள்ளி குழந்தைகள் நாட்டுப்பற்றுடன் மழையிலும் தொடர்ந்து தேசிய கீதம் பாடியது அனைவரையும் நெகிழ்ச்சியடைச் செய்திருக்கிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து விரிவாக தெரிந்து கொள்ள முயன்றோம்.
கர்நாடகா மாநிலத்தின் மங்களூரின் முடிப்பு பகுதிக்கு அருகே சம்பர் தோட்டாவில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி மாணவர்கள் அடைமழையிலும் தேசிய கீதம் பாடியதாக ஆகஸ்ட் 16-ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
சிறப்பு விருந்தினர்கள் தேசிய கொடியை ஏற்றிய உடன் மழை பெய்ய துவங்கியது. உடனடியாக, சிறப்பு விருந்தினர் உள்ளிட்ட மற்றவர்கள் மழைக்கு ஒதுங்கி சென்றுள்ளனர். ஆனால், மிகக் குறைவான எண்ணிக்கை கொண்ட பள்ளியின் மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் மழையிலும் நகராமல் தேசிய கீதம் முடியும்வரை நின்றுள்ளார். அதன்பின் அங்கிருந்து நகர்ந்தனர்.
குழந்தைகளின் செயல் அனைவரின் இதயத்தையும் கவர்ந்து பாராட்டுகளை பெற்று வருகிறது. குழந்தைகளின் வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று தொடர்ந்து வைரலாகி வருகிறது. ஆனால், தேசிய கீதம் பாடும் பொழுது மழைக்கு அஞ்சி ஓடியவர்கள் மீது நெட்டிசன்கள் கண்டங்களும் தெரிவித்து இருந்தனர்.