கொரோனாவை தடுக்க ஹெலிகாப்டரில் வேத மந்திரங்கள் ஓதப்பட்டதா ?
பரவிய செய்தி
கொரோனோ தடுப்பு நடவடிக்கை வேத மந்திரங்கள் ஓதி, தர்ப்பை, மாவிலை கொண்டு
மஞ்சள் நீர் தெளிக்கும் சீனா.. நம்ம ஊர்ல இது மூடநம்பிக்கையாமே.. அட உங்க பகுத்தறிவுக்கு நீங்க நல்லா இருக்க.
மதிப்பீடு
விளக்கம்
சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பு மருந்தினை உலக நாடுகள் பலவும் கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரசை மையமாக வைத்து நூற்றுக்கணக்கான வதந்திகளும், தவறான தகவல்களும் சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவிய சீன நாட்டில் ஹெலிகாப்டர் மூலம் துறவிகள் வேத மந்திரங்கள் ஓத மாவிலை, மஞ்சள் நீர் போன்றவற்றை வானத்தில் இருந்து கீழே ஊற்றுவதாக மேற்காணும் வீடியோ பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
மேற்காணும் வீடியோவை வைத்து சமூக வலைதளங்களில் கூறுவது போன்ற சம்பவம் சீனாவில் நடைபெற்றதா எனத் தேடுகையில் அப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததாக செய்திகள் ஏதும் கிடைக்கவில்லை.
பரப்பப்படும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து தேடிய பொழுது, டுடே லைன் எனும் இணையதளத்தில், ” கோவிட்-19 தொற்றுக்கு எதிராக மந்திரங்கள் ஓத, புனித நீரினை தெளிக்க மியான்மர் துறவிகளை அழைத்து உள்ளதாக ” வைரலாகும் வீடியோவை வெளியிட்டு உள்ளனர். ஆக, துறவிகள் புனித நீரினை ஹெலிகாப்டர் மூலம் தெளிக்கும் வீடியோ எடுக்கப்பட்டது சீனாவில் அல்ல, மியான்மரில் என்பதை அறிய முடிகிறது.
இது குறித்து மேற்கொண்டு தேடுகையில், ” 2019 டிசம்பர் 4-ம் தேதி U Dhammiya என்பவரின் முகநூல் பக்கத்தில் வைரலாகும் வீடியோ உடன் கூடுதலாக இரண்டு வீடியோக்கள் பதிவாகி உள்ளன. அதில், கொரோனா வைரஸ் குறித்து எந்தவொரு வார்த்தையும் இடம்பெறவில்லை.
2019 டிசம்பரில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் நோவல் கொரோனா வைரஸ் கண்டறியப்படுவதற்கு முன்பாகவே வைரலாகும் வீடியோ மியான்மர் நாட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. 2020 ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து நோவல் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரிய அளவில் வெளியாகியது. மியான்மர் நாட்டில் மார்ச் 23-ம் தேதியே முதல் கொரோனா வைரஸ் வழக்கு பதிவாகி இருக்கிறது.
மியான்மர் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பே எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து கொண்டு சீனாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக துறவிகள் வேதங்கள் ஓதியதாக தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள்.