59 சீன செயலிகளின் தடைக்கு மதுரை எம்.பி எதிர்ப்பு என போலி ட்வீட் !
பரவிய செய்தி
டிக்-டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை செய்யட்டுள்ளது ,இந்தியாவின் பொருளாதாரம் பின்னோக்கி செல்ல வழி வகுக்கும். இதை மத்திய அரசு கைவிட வேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி
மதிப்பீடு
விளக்கம்
டிக்டாக், யூசி ப்ரௌசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்த பிறகு பல்வேறு விவாதங்களும், ஆதரவு பதிவுகளும் எழுந்தன. இந்நிலையில், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் 59 சீன செயலிகளின் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதனால் நாட்டின் பொருளாதாரம் பின்னோக்கி செல்லும் என்பதால் அந்த முடிவை கைவிட வேண்டும் என ட்வீட் செய்துள்ளதாக மேற்காணும் ஸ்க்ரீன்ஷார்ட் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தாம் எழுதிய நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். ஆனால், அவர் பெயரை வைத்து பகிரப்பட்டு வரும் ட்வீட் பதிவில் எழுத்து பிழைகள் இருப்பதை காணலாம்.
இது குறித்து சு.வெங்கடேசன் அவர்களின் எண்ணிற்கு யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்ட போது, ” சங்கிகளின் பொய்ப்பிரச்சாரம். இந்திய அரசு சீன செயலிகளை தடை செய்தது தொடர்பாக நான் கூறாத கருத்துகளை போலியாக தயாரித்து பேஸ்புக், ட்வீடர், வாட்ஸ் அப்களில் சங்கிகள் பரப்பி வருகின்றனர். இப்பதிவுகள் போலியானது என பேஸ்புக் நிர்வாகம் உறுதி செய்துள்ளது. பாஜக-வின் வலைப்பக்கங்களிலும், தனிப்பட்ட முறையிலும் இதனை பகிர்ந்து வரும் சங்கிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த போலி பதிவுகளை யார் பகிர்வதும் சட்டவிரோதமானதே. எனவே யாரும் இத்தகைய போலி பதிவுகளை பகிரவேண்டாம் எனக்கேட்டுக் கொள்கிறேன் ” என எஸ்எம்எஸ் வடிவில் பதில் அளிக்கப்பட்டது.
இதேபோல், சு.வெங்கடேசன் உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் அதே தகவல் பதிவிடப்பட்டுள்ளது.
இந்திய அரசு சீன செயலிகளை தடை செய்தது தொடர்பாக நான் கூறாத கருத்துகளை போலியாக தயாரித்து பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் களில் சங்கிகள் பரப்பி வருகின்றனர்.
இப்பதிவுகள் போலியானது என பேஸ்புக் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.#FakeNews #maduraiMPnews pic.twitter.com/Zs3XFtaegP— Su Venkatesan MP (@SuVe4Madurai) July 2, 2020
பா.ஜ.க வின் வலைப்பக்கங்களிலும், தனிப்பட்ட முறையிலும் இதனை பகிர்ந்து வரும் சங்கிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த போலி பதிவுகளை யார் பகிர்வதும் சட்டவிரோதமானதே.
எனவே யாரும் இத்தகைய போலி பதிவுகளை பகிரவேண்டாம் எனக்கேட்டுக் கொள்கிறேன்.#FakeNews— Su Venkatesan MP (@SuVe4Madurai) July 2, 2020
மேலும் படிக்க : CPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா ?
கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பெயரை பயன்படுத்தி வதந்திகள் பரவுவது இது முதல்முறை அல்ல. இதுவரை அவர் கூறாத கருத்துக்களை கூறியதாக பரப்பிய வதந்திகள் குறித்து நாம் கட்டுரைகளை வெளியிட்டு உள்ளோம்.
மேலும் படிக்க : மதுரை எம்.பியின் உண்மையான கோரிக்கையே மாற்றிய ஃபேஸ்புக் பதிவு.
முடிவு :
நம்முடைய தேடலில், 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்ததற்கு எதிராக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்து உள்ளதாக பரவும் ட்வீட் போலியானது என அறிய முடிகிறது.