ட்ராகனைப் பார்த்துமா இந்தியா எனப் பரப்புறீங்க.. இந்தியாவில் நிகழ்ந்ததாகப் பரவும் சீன லைட் ஷோ!
பரவிய செய்தி
இந்தியாவில் மிகவும் அழகான லைட் ஷோ ஜோத்புரில் இதை பார்ப்பதற்கு கட்டணம் 1 நபருக்கு 3 ஆயிரம் ரூபாய் நாம் இலவசமாக பார்க்கலாம் அற்புதம்..
மதிப்பீடு
விளக்கம்
தண்ணீரில் அமைக்கப்பட்டு இருந்த லைட் ஷோ நிகழ்ச்சியில் ட்ராகன் கோட்டையை சுற்றுவது போன்றும், நெருப்பை உமிழ்வதைப் போன்றும் ஆரம்பிக்கிறது இவ்வீடியோ. பின்பு தண்ணீரில் லைட் மூலம் நடனம் என பல அற்புதமான காட்சிகள் அரங்கேற்றப்பட்டு இருக்கிறது. இந்த லைட் ஷோ இந்தியாவின் ஜோத்பூரில் நிகழ்ந்ததாகவும், இதைப் பார்ப்பதற்கு ஒரு நபருக்கு 3,000 கட்டணம் என்றுக் கூறி கடந்த ஆண்டில் இருந்து இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
உண்மை என்ன ?
ட்ராகன் சீனக் கலாச்சாரத்தில் இடம்பெறும் முக்கியமான ஒன்றாகும். வீடியோவில் காண்பிக்கப்பட்டு இருக்கும் காட்சிகள், பின்னணி மொழி என அனைத்தும் சீன நாட்டைச் சேர்ந்தது என எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. அப்படி இருந்துமே, இந்த லைட் ஷோ நிகழ்ச்சி இந்தியாவில் நிகழ்ந்ததாக தவறாக பரவி வருகிறது.
சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள அன்ஹூய் மாகாணத்தைச் சேர்ந்த புயாங்கில் அமைந்திருக்கும் ஷூவாங்கிங்வான் பூங்காவில் பண்டைய போர் தீம் வாட்டர் ஷோ நிகழ்வது வழக்கம். இந்த வீடியோ 70வது தேசிய தின கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்ததாக தவறான தகவல் பரவுகிறது என்று piyao.org.cn இணையதளத்தில் சீன மொழியில் வீடியோ குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியில் உள்ள உமைத் பவன் பேலஸ் லைட்ஷோவிற்கு புகழ்பெற்ற ஒன்றாகும். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் திருமணத்திற்காக உமைத் பவன் பேலஸில் லைட் ஷோ நிகழ்ச்சி நிகழ்ந்து இருக்கிறது.
இந்தியாவில் ஜோத்பூர் பகுதியில் நட்சத்திர விடுதியாக செயல்படும் உமைத் பவன் பேலஸில் லைட் ஷோ நிகழ்வது வழக்கம். ஆனால், அதற்கு பதிலாக சீனாவில் நிகழ்ந்த லைட் ஷோ நிகழ்ச்சியை ஜோத்பூரில் நிகழ்ந்ததாக தவறாகப் பரப்பி வருகிறர்கள்.