ஜெயலலிதா காலில் ப.சிதம்பரம் விழுந்ததாக கூறும் படம் உண்மையா?

பரவிய செய்தி

ப.சிதம்பரத்தின் அரிய புகைப்படம் ! ஹெலிகாப்டரை வணங்குகிறார்கள், காலில் விழுகிறார்கள் என சொன்ன சிதம்பரம் ஜெயலலிதா காலில் வீழ்ந்த படம்.

மதிப்பீடு

விளக்கம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் காலில் தமிழக அமைச்சர்கள், கட்சியைச் சேர்ந்தவர்கள் என பலரும் விழுந்து வணங்கும் நிகழ்வுகள் எப்பொழுதும் விமர்சனம் செய்யப்படும். காரில் செல்பவருக்கு குனிந்து வணங்குவது, ஹெலிகாப்டரை நோக்கி வணங்குவது என உச்சபட்ச விமர்சனங்கள் எழுந்து ஓய்ந்துள்ளன.

இந்நிலையில்,  ஜெயலலிதா காலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் விழுந்து வணங்கியதாக இப்புகைப்படம் பலமுறை வைரலாகி பார்த்திருக்க வாய்ப்புண்டு. காரணம், அதிமுக கட்சியினரை கிண்டல் செய்தவரே ஜெயலலிதா காலில் விழுந்த அரிய நிகழ்வு என்பதனாலே.

இச்செய்தியும், புகைப்படமும் பார்த்த உடன் நம்பக்கூடிய வகையில் இருந்தாலும் உண்மை இல்லை என்பதை தெளிவுப்படுத்த வேண்டி உள்ளது. 2001 சட்டசபைத் தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சியில் அமர்ந்த அதிமுகவில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா காலில் விழும் கலாச்சாரம் இருந்து உள்ளது.

2005 ஆம் ஆண்டு செப்டம்பரில் Blog ஒன்றில் ” Tamil nadu ministers falling  at jayalalitha feet ” என்ற தலைப்பில் பதிவிட்ட புகைப்பட தொகுப்பில் தமிழக அமைச்சர்கள் பலரும் ஜெயலலிதா காலில் விழும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளது.

அதில், முதலில் இருக்கும் படமே தற்போது வைரலாகிக் கொண்டிருக்கும் புகைப்படம் தான். அந்த புகைப்படத்தின் கீழே தமிழக அமைச்சர் தம்பி துரை எனக் குறிப்பிட்டு உள்ளனர். 2001-2006-ல் அதிமுக ஆட்சியில் பர்கூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றிப் பெற்ற தம்பி துரை தமிழக அமைச்சராக பதவி வகித்தார்.

ஜெயலலிதா காலில் ப.சிதம்பரம் விழுந்ததாக கூறும் செய்திகள் சில ஆண்டுகளுக்கு முன்பு 2014 தேர்தல் சமயத்தில் அதிகம் பரவத் துவங்கியது.  Blog-ல் பதிவிடப்பட்ட புகைப்படங்கள் 2005 -ல் அன்றைய ஆட்சிக் காலத்திலேயே பதிவிடப்பட்டு உள்ளது.

தம்பிதுரை அவர்களின் புகைப்படமே ப.சிதம்பரம் என தவறாக பரவி வருகிறது என்பதை தெளிவுப்படுத்திக்  கொள்ளுங்கள்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button