குடியுரிமையை நிரூபிக்காவிட்டால் தடுப்பு முகாம் உறுதி-அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக வதந்தி.
பரவிய செய்தி
எந்த மதத்தவராக இருந்தாலும் குடியுரிமையை நிரூபிக்க முடியவில்லை என்றால் தடுப்பு முகாம்களில்தான் அடைக்கப்படுவார்கள். இது முஸ்லீம்களுக்கு மட்டும் எதிரானது என்கிற திமுகவின் பிரச்சாரம் உள்நோக்கமுடையது – அமைச்சர் ஜெயக்குமார்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழகத்தில் குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவது சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் அரசியல் சார்ந்து விமர்சிக்கவும் செய்யப்படுகிறது. எதிர் கட்சியான திமுக தான் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு போராட்டங்களை தூண்டி விடுவதாக ஆளும் அதிமுக அரசு கூறி வருகிறது.
இந்நிலையில், குடியுரிமையை நிரூபிக்க முடியவில்லை என்றால் எந்த மதத்தவராக இருந்தாலும் தடுப்பு முகாமில் அடைக்கப்படுவார்கள் என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக ஜெயா பிளஸ் செய்தியின் நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அமைச்சர் ஜெயக்குமார் அளித்த தகவல் என பரவும் செய்தி உண்மையா என அறிந்து கொள்ள ஜெயா பிளஸ் செய்தியின் முகநூல் பக்கத்தை ஆராய்கையில், ” வண்ணராப்பேட்டையில் திட்டமிட்டு போராட்டம் தூண்டிவிடப்பட்டுள்ளது. திமுக சார்பில் திண்டுக்கல் லியோனி பங்கேற்ற கூட்டம் நடந்த பின்னரே போராட்டம் நடைபெற்றது ” என அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பிப்ரவரி 17-ம் தேதி நியூஸ் கார்டு ஒன்று வெளியாகி இருக்கிறது.
பிப்ரவரி 17-ம் தேதி அமைச்சர் ஜெயக்குமார் குறித்து வெளியான நியூஸ் கார்டில் குடியுரிமை குறித்து சர்ச்சையான பதிவை எடிட் செய்து தவறாக பரப்பி உள்ளார்கள். ஜெயா பிளஸ் செய்தியின் முகநூல் பக்கத்திலும் பரவும் வரும் நியூஸ் கார்டு போலியானது என பதிவிடப்பட்டுள்ளது.