மேகங்களில் ஐயப்பனின் உருவமா ?
பரவிய செய்தி
சபரிமலை உச்சியில் மேகக் கூட்டத்தில் ஐயப்பன் தவக்கோலத்தில் அமர்ந்து இருக்கும் அற்புதமானக் காட்சி.
பதிவேற்றம் செய்த தளம் : Clouds forming as like that Lord Ayappan
மதிப்பீடு
சுருக்கம்
மேகங்களின் தோற்றத்தில் எளிமையாக போட்டோஷாப் மூலம் ஐயப்பன் உருவத்தை உருவாக்கி உள்ளனர். மேகங்களின் படம் மற்றும் தவறான செய்தி பற்றி கீழே முழுமையாக படிக்கவும்.
விளக்கம்
அன்றைய காலத்தில் இறை நம்பிக்கைப் பெரிதும் கொண்டவர்கள் தன் மனதிற்கு பிடித்த கடவுளின் உருவத்தை ஓவியமாய் வரைந்து மகிழ்ச்சி கொண்டனர்.
தற்போதைய நவீன உலகில் தொழில்நுட்பத்தில் அதிலும் அனைவரும் எளிதாக பயன்படுத்தக் கூடிய போட்டோஷாப் மூலம் தனக்கு பிடித்த கடவுளின் உருவத்தை மேகத்தில், காய்கறியில், பழத்தில், பூக்களில் தெரிவது போன்று வடிவமைக்கின்றனர்.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக, நிலவில் சாய்பாபா முகம் தெரிகிறது என அனைவரையும் நம்ப வைத்த படங்கள் : நிலவில் சாய்பாபா முகம் எப்படி ?
அதே போன்று தான், சபரிமலை உச்சியில் மேகங்களுக்கிடையே ஐயப்பன் தவக்கோலத்தில் அமர்ந்து இருப்பதாக பரவும் படங்களும், செய்திகளும் போட்டோஷாப் மூலம் உருவானவை. இந்த செய்தி ஒரு செய்தித்தாளில் வந்தது போன்று உள்ளது. அதனை, ஆன்மீக இணையதளம் ஒன்றில் பதிவேற்றம் செய்து உள்ளனர்.
உண்மையான படம் :
நகரத்திற்கு மேலே பிரம்மிக்க வைக்கும் இந்த மேகக் கூட்டங்கள் அமெரிக்காவின் மிசூரி மாகாணத்தில் செயின்ட் லூயிஸ்(St. louis) நகருக்கு மேல் தான் எடுக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் செல்லும் பொழுது இப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞர் தன் அனுபவத்தை “ Taking the time to look at clouds “ என்ற தலைப்பில் ஓர் கட்டுரையில் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவில் எடுத்தப் புகைப்படத்தை கேரளா சபரிமலை ஐயப்பன் என போட்டோஷாப் செய்து மதம் சார்ந்த வதந்தியை பரப்பி வருகின்றனர்.
இதே படம் வட இந்தியாவில் சிவனின் உருவம் என பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.