பிஜேபி ஆட்சியில் 230 செயற்கைக்கோள் செலுத்தப்பட்டதா?
பரவிய செய்தி
காங்கிரஸின் 10 ஆண்டு ஆட்சியில் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் மட்டுமே செலுத்தியுள்ளனர். பிரதமர் மோடியின் 4 ஆண்டு ஆட்சியில் 230 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
பிரதமர் மோடியின் ஆட்சியில் 230 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் இஸ்ரோ மூலம் செலுத்தப்பட்டது என்பது மிகைப்படுத்தப்பட்டதே. 2013-2015-க்கு இடைப்பட்ட ஆண்டில் மட்டும் இஸ்ரோ வியாபாரரீதியாக விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள்களின் எண்ணிக்கையே 28. அதன் பின் 2017-ல் 101 நானோ செயற்கைக்கோள்களை செலுத்தியதே அதிகபட்சம்.
விளக்கம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளி ஆராய்ச்சிகள், தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்கு பல செயற்கைக்கோள்களை செலுத்தி வருகிறது. ஆராய்ச்சிகள் மட்டுமின்றி வணிகரீதியாகவும் பிற நாடுகளின் செயற்கைக்கோள்கள் இந்தியாவில் இருந்து இஸ்ரோ மூலம் விண்ணில் செலுத்தித் தரப்படுகிறது.
இஸ்ரோ PSLV(Polar satellite launch vehicle) ராக்கெட் மூலம் அயல்நாடுகளின் செயற்கைக்கோள்களை வெற்றிக்கரமாக விண்ணில் ஏவுகிறது. 1994-2015 வரையில் மட்டும் இந்தியாவின் சர்வதேச வாடிக்கையாளர்களான 51 நாடுகளின் 84 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது.
1992-ல் இந்திய அரசால் உருவான Antrix Corporation Limited, இஸ்ரோவின் தயாரிப்புகள் மற்றும் சேவையை வணிகரீதியாக பயன்படுத்துவது மற்றும் ஊக்கமளிக்கச் செய்கிறது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு 2004-2014 வரையிலான 10 ஆண்டுகளில் வணிக ரீதியாக 36 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது.
2013-2015-க்கு இடைப்பட்ட ஆண்டில் மட்டும் வணிகரீதியாக இந்தியா PSLV மூலம் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை செலுத்தியது. இத்தகைய வணிக ரீதியாக செலுத்திய செயற்கைக்கோள்களுக்கு கிடைத்த வருவாய் 101 மில்லியன் டாலர்கள்.
பிரதமர் மோடி ஆட்சியில் இஸ்ரோ மூலம் செலுத்தப்பட்ட அதிகபட்ச வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் என்றால் 2017-ல் செலுத்தப்பட்டவை மட்டுமே.
2017 பிப்ரவரி 15-ம் தேதி இஸ்ரோ அயல் நாடுகளின் 101 நானோ செயற்கைக்கோள்கள் மற்றும் இந்தியாவின் 3 செயற்கைக்கோள் என மொத்தம் 104 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் விண்ணில் செலுத்தி சாதனைப் படைத்தது.
முடிவு :
- காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள் மட்டுமே செலுத்தியாகக் கூறுவது தவறு.
- அதேபோன்று தற்போதைய பிரதமர் மோடியின் ஆட்சியில் 230 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் செலுத்தியதாகக் கூறுவதும் தவறு.
- 1975-ல் இருந்து இதுவரை இந்தியா விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள்கள் பற்றிய விவரங்கள் லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.
எப்படி பார்த்தாலும், காங்கிரஸ் ஆட்சியை விட மோடி ஆட்சியிலேயே அதிகம் செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளது எனக் கூறலாம். அதில், தவறில்லை. எனினும், அதற்கான ஒப்பந்தங்கள், தயாரிப்புகள் முன்பே நடந்து இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Antrix corporation limited வெளியிட்ட தகவலின்படி, “ Global Satellite Industry உடைய வருவாய் 2014-ல் 203 பில்லியன் டாலர், 2015-ல் 208.3 பில்லியன் டாலர் எனக் கூறியுள்ளனர். 2008-ல் அதன் மதிப்பு 144.4 பில்லியன் டாலர் ஆக இருந்துள்ளது. பத்து ஆண்டுகளில் வருவாயானது இரு மடங்கு உயர்ந்துள்ளது எனலாம் “.
செயற்கைக்கோள் எண்ணிக்கையை குறிப்பிடும் பொழுது வணிகம் சார்ந்த சேவை மற்றும் தயாரிப்பு மூலம் ஈட்டிய வருவாய் பற்றியும் அறிதல் அவசியமே.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் வெளிநாட்டு செயற்கைக்கோள் எண்ணிக்கையை மிகைப்படுத்தி போலியான தகவலை அளித்துள்ளனர் எனப் புலப்படுகிறது.