காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் காரில் இருந்து பணப்பெட்டி பறிமுதல் செய்யப்பட்டதாகப் பரவும் பொய்!

பரவிய செய்தி

சற்றுமுன். கன்னியாகுமரி பாராளுமன்ற காங்கிரஸ்  வேட்பாளர் விஜய் வசந்த் வாகனத்தில் பணப் பெட்டி பறிமுதல்

X link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு ஓட்டுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருள் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

X link 

இந்நிலையில் இந்தியக் கூட்டணி சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் விஜய் வசந்தின் காரில் இருந்து பணப் பெட்டி பறிமுதல் செய்யப்பட்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பாஜகவினரால் பரப்பப்படுகிறது.  

Facebook link

உண்மை என்ன?

பரவக் கூடிய புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். இப்படத்துடன் தினமணி, தினகரன் போன்ற தளங்கள் கடந்த 6ம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது. 

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், கடந்த 5ம் தேதி கருங்கல் பகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு நாகர்கோவில் திரும்பியுள்ளார். அப்போது தக்கலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் அவரது வாகனத்தை சோதனையிட்டுள்ளனர்.

கார் மற்றும் காரில் இருந்த பொருட்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்ட பிறகு அவர் அங்கிருந்து சென்றுள்ளார். பணம்  கைப்பற்றியதாக எந்த தகவலும் அச்செய்திகளில் குறிப்பிடவில்லை. சோதனையின் போது எடுக்கப்பட்ட வீட்யோவுடன் ‘தந்தி டிவி’ செய்தி வெளியிட்டுள்ளது. அதிலும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக எதுவும் கூறவில்லை. அந்த சோதனையின் போது எடுக்கப்பட்ட படத்தினைதான், பணப் பெட்டி பறிமுதல் செய்யப்பட்டதாகத் தவறான தகவலுடன் பரப்புகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வாகனத்தில் இருந்து எந்த பணப் பெட்டியும் பறிமுதல் செய்யப்படவில்லை. 

சமீபத்தில் சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்லும் ரயிலில் சுமார் 4 கோடி ரூபாய் தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தைக் கொண்டு சென்றவர்களில் சதீஷ் என்பவரிடம் பாஜக உறுப்பினர் அட்டையும் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. அடையாள அட்டை நகலும் வைத்திருந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தான் விஜய் வசந்த் பற்றி தவறான தகவலைப் பரப்புகின்றனர்.

முடிவு :

கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் காரில் இருந்து பணப் பெட்டி பறிமுதல் செய்யப்பட்டதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அவரது கார் சோதனை செய்யப்பட்டது. ஆனால், எந்த பணப் பெட்டியும் பறிமுதல் செய்யப்படவில்லை.   

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader