காங்கிரஸ் ஒரு முஸ்லீம் கட்சி என ராகுல் காந்தி அறிவித்ததாகப் பரப்பப்படும் பொய் செய்தி !

பரவிய செய்தி

காங்கிரஸ் ஒரு முஸ்லிம் கட்சி என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை முஸ்லீம் கட்சியாக அறிவித்துள்ளதாக வீடியோ ஒன்றினை பாஜக கட்சியினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். அந்த செய்தியில் உருது பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி காண்பிக்கப்படுகிறது. 

Archive link 

உண்மை என்ன ? 

காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தி முஸ்லீம் கட்சியாக அறிவித்துவிட்டதாகப் பரவும் செய்தி குறித்து இணையத்தில் தேடினோம். பரவக் கூடிய வீடியோவில் காண்பிக்கப்படும் உருது செய்தித் தாள் குறித்த பதிவுகள் 2018ம் ஆண்டு முதலே பரவி வந்துள்ளதைக் காண முடிந்தது. 2018, ஜூலை 13ம் தேதி ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் இது குறித்துப் பேசியுள்ளார்.

Twitter link 

அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சி  ஒன்றில், ‘காங்கிரஸ் கட்சி முஸ்லிம் கட்சி என அக்கட்சித் தலைவர் கூறியதைப் பத்திரிகை ஒன்றில் படித்தேன்’ எனக் கூறியுள்ளார். 

Twitter link 

காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தியை, முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த அறிஞர்கள் சிலர் சந்தித்துப் பேசியுள்ளனர். இதனைத் தொடர்ந்தே உருது பத்திரிகையில் இப்படி ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தேடியதில், ராகுல் காந்தியுடன் அந்த சந்திப்பில் கலந்து கொண்ட உச்சநீதிமன்ற வழக்கறிஞர் Fuzail Ahmed Ayyubi என்பவர் 2018 ஜூலை 15ம் தேதி ‘ஆல்ட் நியூஸ்’ இணைய தளத்திற்கு கூறியதாவது, “காங்கிரஸ் கட்சியின் கொள்கை மற்றும் திட்டங்களில் முஸ்லீம்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்று அதன் தலைவர் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் காங்கிரஸ் கட்சிக்கு மற்ற மதங்களும் சமூகப் பிரிவுகளும் எவ்வளவு முக்கியமோ அதே அளவு முஸ்லீம்களும் முக்கியமானவர்கள். மற்ற இந்தியர்களுக்குக் காங்கிரஸ் கட்சி எப்படி உரித்தானதோ, அதேபோல் முஸ்லீம்களுக்கும் உரித்தானது என்றார்”. 

அதேபோல் கூட்டத்தில் கலந்துகொண்ட மற்றொரு நபரான ஜேஎன்யு சட்டம் மற்றும் நிர்வாக ஆய்வு மையத்தில் ஆசிரியராக இருக்கும் கஜாலா ஜமீல், “அந்த கூட்டத்தில், ராகுல் காந்தி முஸ்லீம்களைச் சமமான குடிமக்களாகப் பார்ப்பதாகக் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான ஃபரா நக்விக்கும் ராகுல் காந்தி கூறியதாக உருது பத்திரிகையில் வெளிவந்துள்ள தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

உருது பத்திரிகையில் வெளியான செய்திக்குக் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா மறுப்பு தெரிவித்தது தொடர்பாக ‘நியூஸ் 18’ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அவர், “ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் பெயர்களைப் பயன்படுத்தி பிரதமர் பொய் கூறுகிறார். அடுத்த தேர்தலில் தோல்வி உணர்ந்து விரக்தியில் சமூகத்தில் வெறுப்பு மற்றும் பிரிவினையின் விஷத்தைப் பரப்புகிறார்” எனக் கூறியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  பிரியங்கா சதுர்வேதி தனது டிவிட்டர் பக்கத்தில் “அந்த செய்தி நிறுவனத்தின் பொய்கள் மற்றும் திரிபுகளே இவை. இதனை பாஜக தனது பிரச்சாரத்தை முன்னெடுக்க பயன்படுத்துவதன் மூலம், நாட்டை தவறாக வழிநடத்தும் அவர்களது தந்திர யுக்திகள் மீண்டும் அம்பலப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவின் அடிப்படை கோட்பாடுகளையும் மற்றும் மக்களாட்சியையும் காக்க நாங்கள் போராடுவதை இது நிறுத்திவிடாது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Archive link

2018ம் ஆண்டு உருது பத்திரிகையில் செய்தி வெளியான போதே இது தவறான செய்தி எனக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும், காங்கிரஸ் கட்சியினரும் விளக்கம் அளித்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

மேலும் படிக்க : இந்திரா காந்தி ஹிஜாப் அணிந்து இருப்பதாக வதந்தி பரப்பும் பாஜகவினர் !

முன்னதாக இந்திரா காந்தி இஸ்லாமியர் என்றும், ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தியின் திருமணம் இஸ்லாம் முறைப்படி நடைபெற்றது என்றும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. அதன் உண்மைத் தன்மை குறித்தும் யூடர்ன் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க : ராஜீவ், சோனியா காந்தி திருமணம் இஸ்லாம் முறைப்படி நடந்ததாகப் பரப்பப்படும் பொய் !

முடிவு : 

நம் தேடலில், காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தி முஸ்லீம் கட்சியாக அறிவித்துவிட்டதாகப் பரப்பப்படும் செய்தி பொய்யானது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader