காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் மன்மோகன்சிங் நிலை எனப் பரப்பப்படும் தவறான வீடியோ !

பரவிய செய்தி

பத்து ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் யார் பிரதமராக இருந்தார் என்பதை விளக்கும் வீடியோ. 

Twitter link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

ந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டுகள் ஆட்சியில் பிரதமாக மன்மோகன்சிங் பதவி வகித்தார். ஆனால், பத்து ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் யார் பிரதமராக இருந்தார் என்பதை விளக்கும் 30 நொடிகள் கொண்ட வீடியோ எனக் கூறி இப்பதிவு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

பரப்பப்படும் 30 நொடிகள் கொண்ட வீடியோவில், இந்தியா மற்றும் இலங்கை கொடி இடம்பெற்று இருக்கிறது. இலங்கை பிரதிநிதியுடனான சந்திப்பில் மன்மோகன்சிங் ஓரத்தில் இருக்கும் நாற்காலியில் அமர வைக்கப்படுகிறார். இந்திய கொடிக்கு முன்பாக உள்ள நாற்காலியில் சோனியா காந்தியும், இலங்கை பிரதிநிதியும் அமர்ந்து பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடுகையில், ” இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் சோனியா காந்தி சந்தித்ததாக “ 2017ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி ஏஎன்ஐ செய்தி முகமை ட்விட்டரில் புகைப்படங்கள் உடன் பதிவிட்டு இருக்கிறது. பரப்பப்படும் வீடியோவில் இடம்பெற்ற காட்சிகளே புகைப்படங்களாக இருப்பதை பார்க்கலாம்.

Twitter link | Archive link

இலங்கை பிரதமருடன் மன்மோகன்சிங் மற்றும் சோனியா காந்தி உள்ளிட்டோர் மேற்கொண்ட சந்திப்பின் வீடியோ ஆனது 2017 ஏப்ரல் 26ம் தேதி NNIS-News எனும் யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது.

அதே ஆண்டில் நவம்பர் 23ம் தேதி இலங்கை பிரதமரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்ததாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.

இலங்கை பிரதமரை காங்கிரஸ் கட்சியினர் சந்திக்கும் போது அக்கட்சியின் தலைவர் என்ற பொறுப்பில் சோனியா காந்தி முன் இருக்கையில் அமர்ந்து இருக்கிறார். சோனியா காந்தி 1998 முதல் 2017 வரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். 2017 டிசம்பரில் இருந்து 2019 வரை ராகுல் காந்தி தலைவராக பதவி வகித்தார்.

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த போது 2018 அக்டோபர் மாதம் இலங்கை பிரதமருடனான சந்திப்பில் ராகுல் காந்தி முன் இருக்கையில் அமர்ந்து இருப்பதையும், மன்மோகன்சிங் மற்றும் சோனியா காந்தி அருகே உள்ள இருக்கைகளில் அமர்ந்து இருப்பதையும் வீடியோவில் காணலாம்.

முடிவு : 

நம் தேடலில், இலங்கை பிரதமர் உடனான சந்திப்பில் பத்து ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பிரதமரான மன்மோகன்சிங் ஓரமாக அமர வைக்கப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ தவறானது. அந்த வீடியோ மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது எடுக்கப்பட்டது அல்ல, 2017ல் எடுக்கப்பட்டது.

இலங்கை பிரதமருடன் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொள்ளும் சந்திப்புகளில் அக்கட்சியின் தலைவரே முன் இருக்கையில் அமர்ந்து உள்ளனர். ராகுல் காந்தி தலைவராக இருந்த போதும் அவ்வாறே நிகழ்ந்து உள்ளது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Sanmuga Raja

Sanmuga Raja working as Senior Sub-Editor at YouTurn since May 2017. He holds a Bachelor’s degree in Engineering. His role is to analyze and obtain valid proof for social media and other viral hoaxes, then write articles based on the evidence. In obtaining the proof for claims, he also interviews people to verify the facts.
Back to top button
loader