கூட்டுறவு வங்கிக்கடன் நகைகள் ஏலம் விடப்படும், தள்ளுபடி சாத்தியமில்லை என ஐ.பெரியசாமி கூறினாரா ?
பரவிய செய்தி
கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்களின் நகைகள் விரைவில் ஏலம் விடப்படும். தமிழக முதல்வரின் அறிவுத்தலின்படி ஏற்கெனவே சில மாவட்டங்களில் ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே தள்ளுபடி சாத்தியமில்லை – கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி.
மதிப்பீடு
விளக்கம்
கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை கட்டாதவர்களின் நகைகள் ஏலம் விடுவதாகவும், அதனால் தள்ளுபடி சாத்தியமில்லை என அமைச்சர் பெரியசாமி கூறியதாக ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு ஒன்றை பாஜகவினர், அதன் ஆதரவு பக்கங்கள் மற்றும் சில அதிமுகவினர் கூட பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.
ஒத்த செங்கல் சேப்பாக் சேவை நம்பி நகையை அடமானம் வைத்து ஓட்டளித்து ஏமாளியான தமிழக வாக்காளர்களுக்கு கிடைக்கும் வரபிரசாதம் pic.twitter.com/GOuP1oIeeR
— #சங்கி_Mahesh M 🚩 (@mahesh74391485) January 29, 2022
மிச்ச மீதி நகைகள் இருந்தா, கொண்டு போய் பார்லிமென்ட் தேர்தலுக்குள்ள அடகு வைங்க!!
ஸ்டாலின் பிரதமரானதும் தள்ளுபடி பண்ணுவாப்புல!!..#விடியல்பரிதாபங்கள் #DMKFailsTN pic.twitter.com/1DpqqgyCt7
— Gowri Sankar D (@GowriSankarD_) January 29, 2022
ஒத்த செங்கல் சேகுவோராவை நம்பி நகையை அடமானம் வைத்து ஓட்டளித்து ஏமாளியான தமிழக வாக்காளர்களுக்கு அமைச்சரின் அல்வாத்துண்டு! pic.twitter.com/vSybRAK084
— NK Vijin (@vijinNK) January 29, 2022
உண்மை என்ன ?
திமுக தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு வங்கியில் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்து இருந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும் என அரசாணை வெளியிட்டாலும், நகைக்கடன் பெற்றவர்களில் போலியான நபர்கள் இருப்பதால் முழுமையான ஆய்வு மேற்கொள்ள அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, யாரெல்லாம் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதி இல்லாதவர்கள் என ஓர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது. இதற்கும் பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களில் வைத்துள்ள நகைக்கடன் தள்ளுபடி சாத்தியமில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாக பரப்பப்படும் செய்தி குறித்து தேடுகையில், கடந்த சில நாட்களில் அப்படி எந்த அறிவிப்பும், செய்தியும் வெளியாகவில்லை.
அதேபோல், ஜூனியர் விகடன் முகநூல் பக்கத்தில் தேடிப்பார்க்கையில், ஜனவரி 26-ம் தேதி அமைச்சர் ஐ.பெரியசாமி பற்றி பரவும் நியூஸ் கார்டு வெளியாகவில்லை. சொல்லப்போனால், அன்றைய தினத்தில் நியூஸ் கார்டுகளே வெளியாகவில்லை. குடியரசுத்தினம் என்பதால் அதுசார்ந்த புகைப்படங்களே வெளியாகி இருக்கிறது.
வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டில், மேலே ஜூனியர் விகடன் லோகோ நீல நிறத்தில் இருக்கிறது. ஆனால் தற்போது வெளியாகும் நியூஸ் கார்டுகளில் மஞ்சள் நிறத்திலேயே லோகோ இடம்பெறுகிறது. அதேபோல், பரப்பப்படும் நியூஸ் கார்டில் நடுவில் வாட்டர் மார்க் இல்லை. ஆக, அது எடிட் செய்யப்பட்டது எனத் தெளிவாகிறது.
மேலும், எடிட் செய்யப்பட்ட பயன்படுத்தப்பட்ட அமைச்சர் பெரியசாமியின் புகைப்படம் கடந்த ஆண்டு விகடனில் வெளியான செய்தியில் இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்களின் நகைகள் விரைவில் ஏலம் விடப்படும். தமிழக முதல்வரின் அறிவுத்தலின்படி ஏற்கெனவே சில மாவட்டங்களில் ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே தள்ளுபடி சாத்தியமில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாக பரவும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.