கொரோனா நிவாரண நிதியில் 1 கோடிக்கு புடவை வாங்கியதாக பரப்பப்படும் துர்கா ஸ்டாலினின் பழைய புகைப்படம் !
பரவிய செய்தி
1 கோடி தங்கஜரிகை புடவை கட்டி கெத்து காட்டிய துர்கா, கொரோனா நிவாரண நிதி கலெக்க்ஷன்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ரூ1 கோடி அளவிற்கு தங்க ஜரிகை புடவை கட்டி இருப்பதாகவும், அது கொரோனா நிவாரண நிதி கலெக்சனில் வாங்கியதாகவும் கூறி மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், முகேஷ் அம்பானி, நீதா அம்பானி ஆகியோர் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படம் குறித்து தேடிய போது, 2020 டிசம்பரில் மேலூரைச் சேர்ந்த அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் இப்படத்தை ட்விட்டரில் இதே தகவலுடன் பதிவிட்டு இருக்கிறார். 2020ல் திமுக ஆட்சிக்கு கூட வரவில்லை.
கொரனா நிவாரண நிதி கலெக்சன். 1 கோடி ரூபாய் தங்கஜரிகை புடவை கட்டி கெத்து காட்டும் துர்கா ஸடாலின். pic.twitter.com/TsMvmPO7YT
— L.PRABHAKARAN MELUR (@LPRABHAKARAN) December 22, 2020
மு.க.ஸ்டாலின் குடும்பம் மற்றும் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் சந்தித்துக் கொண்ட நிகழ்வு குறித்து தேடுகையில், ” முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்து தங்களது மகன் ஆகாஷ் திருமணத்திற்கு அழைப்பு விடுத்ததாக ” 2019 பிப்ரவரி 12ம் தேதி எகனாமிக் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
2019 பிப்ரவரி 11ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பக்கத்தில், முகேஷ் அம்பானி குடும்பத்தினர், மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
It was a pleasure to receive a courtesy call from Thiru Mukesh Ambani, Chairman Reliance Industries Limited, in Chennai earlier this evening. pic.twitter.com/acjKFLjzX9
— M.K.Stalin (@mkstalin) February 11, 2019
சீனாவில் இருந்து கொரோனா பரவத் தொடங்கியது 2019 டிசம்பர் மாதம், இந்தியாவில் அதன் தாக்கம் வரத் துவங்கியது 2020ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தான். ஆனால், வைரல் செய்யப்படும் புகைப்படம் எடுக்கப்பட்டது கொரோனா வைரஸ் பாதிப்பு பரவுவதற்கு முன்பாக 2019 பிப்ரவரி 11ம் தேதியே எடுக்கப்பட்டு இருக்கிறது. அப்போது திமுக ஆட்சியிலும் இல்லை, கொரோனாவும் இல்லை.
முடிவு :
நம் தேடலில், கொரோனா நிவாரண நிதி கலெக்சனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் 1 கோடி தங்கஜரிகை புடவை கட்டி இருப்பதாக வைரல் செய்யப்படும் புகைப்படம் ஆனது கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பாக 2019 பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என அறிய முடிகிறது.