கொரோனா நோயாளியுடன் மருத்துவருக்கு காதலா?| தவறாக வைரலாகும் புகைப்படம்.
பரவிய செய்தி
சிகிச்சை அளித்த மருத்துவரையே கரம் பிடித்த கொரோனா நோயாளி !
மதிப்பீடு
விளக்கம்
கொரோனா நோயாளி ஒருவர் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டதாக மேற்காணும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மருத்துவர் உடையில் இருக்கும் பெண் ஒருவருக்கு கொரோனா நோயாளி எனக் கூறப்படும் ஆண் ஒருவர் மோதிரம் அணிவிக்கிறார். அப்புகைப்படத்தின் உண்மைத்தன்மை தெரிந்து கொள்ள தேடிப் பார்த்தோம்.
அப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், Youm7 எனும் அரபிக் இணையதளத்தில் புகைப்படத்தில் இருக்கும் ஜோடியின் 30 புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், கொரோனா நேரத்தில் எகிப்து மருத்துவர்கள் மொஹமத் ஃபாமி மற்றும் அயா மொசபா ஆகியோரின் நிச்சயதார்த்தம் எகிப்து நாட்டின் மன்சௌரா நகரத்தில் உள்ள டார் அல்-ஷிபா மருத்துவமனையில் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அந்த நபருக்கு கொரோனா வைரஸ் இருந்ததாக குறிப்பிடவில்லை. மேலும், அப்புகைப்படங்களில் ” Mohamed Selim Photography ” என மார்க் செய்யப்பட்டுள்ளது. Mohamed Selim Photography உடைய முகநூல் பக்கத்தில் மே 25-ம் தேதி மொஹமத் ஃபாமி மற்றும் அயா மொசபா ஆகியோரை டக் செய்து இப்புகைப்படங்கள் பதிவாகி இருக்கிறது.
மொஹமத் ஃபாமி உடைய முகநூல் பக்கத்திற்கு சென்று பார்க்கையில், எகிப்து நாட்டின் மன்சௌரா நகரத்தில் உள்ள Bani Ubaid மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுவதாக குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், 2018 அக்டோபர் 4-ம் தேதி தன் முகநூல் பக்கத்தில் ” Got Engaged ” என அயா மொசபா பெயரைக் குறிப்பிட்டு பதிவிட்டு உள்ளார்.
நமக்கு கிடைத்த தகவலில் இருந்து, அந்த ஜோடி 2018-ல் இருந்தே பழகி வந்துள்ளனர். அந்த நபருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கூறுவது தவறானது. அவர் ஒரு மருத்துவர். கோவிட்-19 நோயாளி பெண் மருத்துவருடன் காதல் கொண்டதாக பரப்பப்படும் புகைப்படம் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் மட்டுமே. மருத்துவமனையில் வைத்து நோயாளிக்கும், மருத்துவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் நடந்தது போல் சித்தரித்து எடுத்த காரணத்தினால் உலக அளவில் தவறாக பரப்பப்பட்டு வருகிறது.