சீனாவில் இருந்து இந்தியர்களை மீட்டு வந்த இந்திய விமானிகளின் அனுபவம் !
பரவிய செய்தி
கொரோனா வைரஸ் தாக்கினால் தாக்கட்டும்.. சீனாவில் உள்ள இந்தியர்களை துணிச்சலாக மீட்டு வந்த ஏர் இந்தியா விமானிகள்! கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட வுஹான் நகருக்கே சென்று நூற்றுக்கணக்கான இந்தியர்களை மீட்டு வந்துள்ளனர்.
மதிப்பீடு
விளக்கம்
சீனாவில் பரவத் தொடங்கிய நோவல் கொரோனா வைரஸ் பாதிப்பால் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும், 40,000 பேர் வைரசால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு இடையே சீனாவில் இருந்து நூற்றுக்கணக்கான இந்தியர்களை அழைத்து வந்த ஏர் இந்தியா விமானிகளின் சேவை மக்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
கடந்த மாதம் கொரோனா வைரசின் பாதிப்பு உயரத் தொடங்கிய தருணத்தில் சீனாவின் வுஹான் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து வெளியேற முடியாமல் இந்தியர்கள் சிக்கி இருந்தனர். வுஹான் மாகாணத்தில் சிக்கியிருந்த 600 இந்தியர்களை மீட்பதற்கு இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பல முயற்சிகளை தொடங்கினர். இந்த பயணத்திற்கு ஏர் இந்தியாவின் 747-400 போயிங் ரக விமானங்கள் இரண்டு தயார் நிலையில் இருந்தன.
சீனாவின் அனுமதி கிடைத்த உடன் ஜனவரி 31-ம் தேதி டெல்லியில் இருந்து சீனாவின் வுஹான் நோக்கி ஏர் இந்திய விமானம் புறப்பட்டது. இதில், சிறப்பு மருத்துவக் கருவிகள் உடன் மருத்துவர்கள், செவிலியர்கள், விமானிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட மொத்தம் 20-க்கும் மேற்பட்டவர்கள் விமானத்தில் பயணித்து உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு கவச உடைகள், கண்ணாடி, மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
சீனாவில் மருத்துவ சோதனைகள் மற்றும் குடியுரிமை சோதனைகளுக்கு பிறகு பயணிகள் விமானத்தில் ஏற்பட்டன. வுஹானில் இருந்து புறப்பட்ட இந்திய விமானத்தில் 324 இந்திய பயணிகள் பிப்ரவரி 1-ம் தேதி பாதுகாப்பாக இந்தியா அழைத்து வரப்பட்டனர். அடுத்ததாக பிப்ரவரி 2-ம் தேதி 323 இந்தியர்கள் மற்றும் மாலத்தீவைச் சேர்ந்த 7 பேர் ஏர் இந்தியாவின் மற்றொரு விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்.
சீனாவில் உள்ள இந்தியர்களை மீட்க சென்ற குழுவின் தலைவராக கேப்டன் அமிதாப் சிங் செயல்பட்டார். அவருடன் கேப்டன் கமல் மோகன், கேப்டன் சஞ்சய், கேப்டன் ரீஷா, கேப்டன் நரேன் மற்றும் பூபேஷ் ஆகியோர் விமானத்தை இயக்கும் குழுவில் இருந்தனர்.
சீனாவிற்கு மேற்கொண்ட தங்களின் பயணம் குறித்து விமானத்தின் கேப்டன் அமிதாப் சிங் கூறுகையில், ” என்னுடன் சேர்த்து மொத்தம் 20 பேர் இந்தியாவில் இருந்து வுஹானுக்கு சென்றோம். எங்களுடன் சிறந்த மருத்துவர்களும் வந்தார்கள். எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை எங்களுக்கு நொடிக்கு நொடி அறிவுறுத்தினார்கள். சீன மண்ணில் 7 மணி நேரம் எங்களின் விமானம் இருந்தது, நாங்கள் அங்கிருந்த நேரம் முழுவதும் மிகச் சவாலாக இருந்தது. நாங்கள் பயணித்த டெல்லி முதல் வுஹான் வரையிலான தொலைவில் ஒரு சில விமானங்கள் மட்டுமே எங்களை கடந்து சென்றது. அங்கு எங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது ” என ஏஎன்ஐ செய்திக்கு தெரிவித்து உள்ளார்.
சீனாவின் வுஹான் பகுதிக்கு சென்று நூற்றுக்கணக்கான இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வந்த ஏர் இந்திய விமானிகளை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.