கோவிஷீல்டு தடுப்பூசி நிறுவனம் பாஜகவிற்கு அளித்த தேர்தல் நிதி| அதிக நிதிப் பெற்ற மற்றொரு கட்சி ?

பரவிய செய்தி
இந்தியாவில் அவசரகதியில் கொரோனா தடுப்பூசிக்கான அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இரண்டு தடுப்பூசிகளில் ஒன்றான கோவிஷீல்டை தயாரிக்கும் SERUM INSTITUTE OF INDIA என்கிற நிறுவனம் பல வருடங்களாக கோடி கணக்கில் பிஜேபி-க்கு நிதி வழங்கி இருக்கிறது.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி அவசரநிலை பயன்பாட்டிற்காக பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில், 1.1 கோடி கோவிஷீல்டு டோஸ்களையும், 55 லட்சம் கோவாக்சின் டோஸ்களையும் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகளில் வெளியாகியது.
இந்நிலையில், மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி சு.வெங்கடேசன் தன் முகநூல் பக்கத்தில், ” இந்தியாவில் அவசரகதியில் கொரோனா தடுப்பூசிக்கான அனுமதி வழங்க பட்ட நிலையில், இரண்டு தடுப்பூசிகளில் ஒன்றான கோவிஷீல்டை தயாரிக்கும் serum institute of India என்கிற நிறுவனம் பல வருடங்களாக தொடர்ச்சியாக பா.ஜ.க வுக்கு நிதி வழங்கி வந்திருக்கிறது. 2013 தொடங்கி இந்த நிறுவனம் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் நிதி வழங்கி இருப்பதை myneta.info என்கிற இணையத்தளத்தில் காணலாம் ” எனப் பதிவிட்டு இருந்தார்.
இதை வைத்து மீம்ஸ் பகிரத் தொடங்கி இருந்தனர். இதுகுறித்து பதிவிடுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வந்தது.
Myneta.info எனும் இணையதளத்தில் இந்திய தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவில் தெரிவிக்கும் விவரங்களில் இருந்து கட்சிகள் பெறும் தேர்தல் நிதி உள்ளிட்ட முக்கிய தகவல்களை வெளியிடுவர்.
Myneta.info-ல் பாரதிய ஜனதா கட்சி பெற்ற நன்கொடை குறித்து தேடுகையில், 2003-04 முதல் 2018-19 வரையிலான ஆண்டுகளில் நன்கொடை அளித்த பெரும் தொகை குறித்த விவரங்கள் கிடைத்தன. அதில், serum institute of India நிறுவனம், 2013-14-ல் 60 லட்சம், 55 லட்சம், 40 லட்சம், 2014-15ல் 2.5 கோடி, 2016-17ல் 2 கோடி என மொத்தம் 6 கோடியே 5 லட்சம் தேர்தல் நிதி அளித்துள்ளது. Myneta-ல் 2018-2019-ம் ஆண்டு வரையிலான தகவல்கள் மட்டுமே இடம்பெற்று உள்ளன.
இதேபோல், சரத் பவாரின் தேசிய காங்கிரஸ் கட்சிக்கு புனேவை மையமாக் கொண்ட சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் அதிக தொகையை நிதியாக வழங்கி இருக்கிறது. 2013-14 முதல் 2016-17 வரை 5 கோடி நன்கொடையாக வழங்கி இருக்கிறது.
அதுமட்டுமின்றி, 2019-20ல் அக்கட்சிக்கு 3 கோடி நன்கொடை அளித்துள்ளதாக 2021 ஜனவரி 07-ம் தேதி வெளியான எகனாமிக் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது. தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடை அளித்து வருவது அதிகரித்து வருகிறது. 2018-19-ம் ஆண்டு கார்ப்பரேட் மற்றும் தொழில் நிறுவனங்கள் ரூ.876.10 கோடியை 5 தேசிய கட்சிகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளன. இதில்,பாஜக அதிகபட்சமாக ரூ.698 கோடியைப் பெற்றதாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு(ஏடிஆர்) தகவல் வெளியிட்டதாக தி ஹிந்து செய்தியில் 2020 அக்டோபரில் வெளியாகி இருக்கிறது.
ஆதாரம்
BJP bagged largest share of corporate donations in 2018-19: Association for Democratic Reforms
https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/serum-institute-of-india-among-nationalist-congress-partys-top-funders/articleshow/80145592.cms
https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/serum-institute-of-india-among-nationalist-congress-partys-top-funders/articleshow/80145592.cms
https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/serum-institute-of-india-among-nationalist-congress-partys-top-funders/articleshow/80145592.cms