வறட்டியை எரித்தால் கொரோனா ஒழியும் என யோகி ஆதித்யநாத் கூறினாரா ?
பரவிய செய்தி
வரட்டியால் கொரோனாவை விரட்டுவோம். பசுஞ்சாணத்தால் செய்யப்பட்ட வரட்டியை எரிப்பதால் கொரோனா வைரஸ் அழிக்கிறது – உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
மதிப்பீடு
விளக்கம்
பசு மாட்டின் சாணத்தை காய வைத்து எடுக்கப்படும் வறட்டியை எரிப்பதால் கொரோனா வைரஸ் அழியும் என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாக தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
யோகி ஆதித்யநாத் வறட்டியை எரிப்பதால் கொரோனா வைரஸ் அழியும் எனக் கூறினாரா எனத் தேடுகையில், சமீபத்தில் யோகி ஆதித்யநாத் கொரோனா குறித்து அப்படியொரு கருத்தைக் கூறியதாக செய்திகள் வெளியாகவில்லை. 2020-ல் யோகா பயிற்சி மூலம் கொரோனாவை தடுக்க முடியும் என யோகி ஆதித்யநாத் கூறிய பழைய செய்திகளே கிடைத்தன.
தந்தி டிவி சேனலின் நியூஸ் கார்ட் அடிப்படையிலேயே இச்செய்தி வைரலாகி வருவதால், தந்திடிவியின் முகநூல் பக்கத்தை ஆராய்கையில் அவ்வாறான நியூஸ் கார்டு ஏதும் வெளியாகவில்லை.
2022 ஜனவரி 2-ம் தேதியன்று, உத்தரபிரதேசத்தில் 2017ல் இருந்து கலவரங்கள் எதுவும் நடைபெறவில்லை என மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியதாக தந்தி டிவி நியூஸ் கார்டு வெளியிட்டு இருக்கிறது. அதில், வரட்டியால் கொரோனாவை விரட்டுவோம் எனக் கூறியதாக போலியாக எடிட் செய்து இருக்கிறார்கள்.
2020 மார்ச் மாதம் அசாம் பாஜக எம்எல்ஏ சுமன் ப்ரியா, ” மாட்டு சாணம் மற்றும் கோமியம் குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறது. பசுவின் சாணத்தால் எரிக்கப்பட்ட புகை வைரஸ்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது. மாட்டு சாணம் கொடிய கொரோனா வைரசை எதிர்த்துப் போராட உதவும் என நான் நம்புகிறேன் ” எனப் பேசியது விமர்சனத்தைப் பெற்றது.
மேலும் படிக்க : கொரோனாவிற்கு கோமியம், அப்பளம் என பாஜக தலைவர்கள் சொன்ன பலே யோசனைகளின் தொகுப்பு !
பசு கோமியம், அப்பளம் என பாஜக தலைவர்கள் பலரும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு கூறிய யோசனைகள் ட்ரோல் செய்யப்பட்டன. அந்த யோசனைகளின் தொகுப்பை முன்பே நாம் தொகுப்பாக வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், பசுஞ்சாணத்தால் செய்யப்பட்ட வறட்டியை எரிப்பதால் கொரோனா வைரஸ் அழிக்கிறது என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாக பரவும் செய்தி தவறானது. பரப்பப்படும் தந்தி டிவி நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.