பசுமாட்டின் வயிற்றுக்குள் ஓட்டை.. பால் உற்பத்தியை அதிகரிக்கும் தொழில்நுட்பமா ?
பரவிய செய்தி
பசுமாட்டின் வயிற்றுக்குள் ஓட்டை போட்டு இவர்கள் செய்யும் தொழில்நுட்பம் பாருங்கள். மாடுகளை இயந்திரங்கள் போல நடத்துகிறார்கள். எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கள்… அதிகம் பகிருங்கள்.
மதிப்பீடு
சுருக்கம்
உடல்நிலை சரியில்லாத மாடுகளின் வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சையின் மூலம் துளையை ஏற்படுத்தி மாட்டின் செரிமான அமைப்பை கண்காணிக்கின்றனர்.
விளக்கம்
பால் பண்ணைத் தொழிற்சாலைகளில் மாடுகளின் பால் உற்பத்தியை அதிகரிக்க புதிய வழிமுறைகள் கடைபிடித்து வருகின்றனர். பசு மாட்டின் உடலின் மத்திய பகுதியில் துளையை உண்டாக்கி இயந்திரம் போன்று நடத்தி வருகிறார்கள். இதனால் மேய்ச்சலை அதிகப்படுத்தி பால் உற்பத்தியை பல மடங்கு உயர்த்தி அதிக லாபம் பார்க்கிறார்கள் என்று ஃபேஸ்புக் பக்கங்களில் துளையிடப்பட்ட மாடுகளின் படங்களும், வீடியோக்களும் வைரலாகி வருகிறது.
இவ்வாறு பரவி வரும் வீடியோவும், ஒரு சில படங்களும் உண்மையானவையே. ஆனால், பால் உற்பத்தியை அதிகரிக்க மாட்டின் வயிற்றின் மீது துளையிட்டுள்ளனர் என்று கூறுவது தவறான செய்திகளே..
மாடுகளின் வயிற்றின் மீது காணப்படும் துளையானது ஓர் அறுவை சிகிச்சையால் ஏற்படுத்தப்பட்டவை. “ Rumen Fistula “ எனப்படும் இந்த அறுவை சிகிச்சையால் மாடுகளின் வயிற்றுப் பகுதியில் துளையை ஏற்படுத்தி மாட்டின் செரிமான அமைப்பை கண்காணிக்கின்றனர். இது மட்டுமின்றி மாடுகளின் உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்து ஆரோக்கியமான நிலைக்கு மாறுவதற்கு நுண்ணுயிர்களை பரிமாற்றம் செய்வதற்காகவும் பயன்படுகிறது.
Rumen Fistula:
மருத்துவ அறுவை சிகிச்சை மூலம் விலங்கின் உட்புற உறுப்பிற்கும், வெளிப்புற உறுப்பிற்கும் இடையே நிரந்தரமான துளை உண்டாக்கப்படும்.
College of veterinary Medicine at Illinois-ன் பேராசிரியர் Dr.Brian Aldridge கூறுகையில், Rumen flora சிகிச்சை செரிமானப் பிரச்சனை உள்ள மாடுகளுக்கு மட்டும் அல்ல. செம்மறி ஆடுகள், ஆடுகளும் பயன்படுத்தலாம், ஏன்னென்றால் இவை அனைத்திற்கும் ஒரே மாதிரியான செரிமான அமைப்புகளே உள்ளன.
Rumen Fistula அறுவை சிகிச்சையில் மாட்டின் வயிற்றுனுள் பொருத்துவதற்கு 300 டாலர்கள் வரை செலவிடப்படுகிறது என்று டாக்டர் சுசன் கூறியுள்ளார்.
2009-ல் Tufts University cummings school of Veterinary வெளியிட்ட வீடியோ பதிவில் இத்தகைய அறுவை சிகிச்சை மற்றும் அதன் தொடர்புடைய அனைத்து தகவல்களும் கூறப்பட்டுள்ளன.
மாடுகளின் வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சையின் மூலம் துளையை ஏற்படுத்தி மாட்டின் செரிமான அமைப்பை கண்காணிப்பதற்கும், மாடுகளின் உடல் நிலையை குணப்படுத்தவும் உண்டாக்கப்பட்டதை தவறான கதைகளுடன் வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.